சென்னை மெட்ரோ கட்டணம் ரூ.50 ஆக உயர வாய்ப்பு - சின்னமலை முதல் ஏர்போர்ட் வரையிலான புதிய வழித்தடத்தில்!
சென்னை: சென்னை கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் கட்டணத்தினை விட புதிய பாதையில் இயக்கப்பட உள்ள மெட்ரோ ரயிலின் கட்டணத்தினை உயர்த்த பரீசிலினை செய்யப்பட்டு வருகின்றது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முதல் கட்டமாக ஆலந்தூர் , கோயம்பேடு இடையே இயக்கப்படுகிறது. உயர்மட்ட பாதையில் தற்போது மெட்ரோ ரயில்கள் சென்று வருகின்றன.
10 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சேவைக்கு குறைந்த கட்டணம் ரூபாய் 10ம் அதிக பட்சமாக ரூபாய் 40ம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம் அதிகம் என்றும் இதனை குறைக்க வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் பயணிகள் கருத்து தெரிவித்தனர். மற்ற நகரங்களை விட சென்னையில் கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறினர். ஆனாலும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கட்டணத்தை குறைக்கவில்லை.
இந்த நிலையில் சின்னமலை, விமான நிலையம் இடையே 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை தொடங்கும் பட்சத்தில் கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை 15 கி.மீ. தூரத்திற்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
தற்போது உள்ள கட்டணத்தை விட கூடுதலாக ரூபாய் 10 சேர்த்து ரூபாய் 50 நிர்ணயிக்க பரிசீலிக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோயம்பேட்டில் இருந்து சென்னை விமான நிலையம் செல்வதற்கு ரூ. 50 கட்டணம் என்பது நியாயமானது தான். அதிகம் என்று சொல்ல இயலாது" என்று தெரிவித்துள்ளார்.