சென்னை மெட்ரோ ரயில்... 29ம் தேதி போயஸ் கார்டனிலிருந்து தொடங்கி வைக்கிறார் ஜெ.
சென்னை: சென்னைவாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவையை வரும் 29ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயிலுக்கான பாதைகள் போடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழித்தடங்களில் 7 நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வழித்தடங்களை ரயில்வேத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, போக்குவரத்து தொடங்க சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து, இந்த பாதையில் ரயில் போக்குவரத்து ஒத்திகையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 29ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து மெட்ரொ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோயம்பேடு, சிஎம்டிஏ, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 ரயில் நிலையங்களில் இறுதிகட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் நிலையங்களில் வண்ணம் பூசுதல், டிக்கெட் கவுன்ட்டர் திறப்பதற்கான ஏற்பாடு, எஸ்கலேட்டர்களில் ஆய்வு நடத்துதல், ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள், பார்க்கிங் வசதிகளுக்கு ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.