கரையைக் கடந்தது வர்தா புயல்.. மீண்டும் சேவையைத் தொடங்கியது மெட்ரோ ரயில்
புயல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
சென்னை: வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து சென்னையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை மீண்டும் மாலை முதல் தொடங்கியது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே மதியம் 3.30 மணிக்கு கரையைக் கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புயல் கரையைக் கடந்த போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் முக்கிய சாலைகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்ததால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.
சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். புயல் கரையைக் கடந்தபோதும் இன்னும் பல இடங்களில் மின்சாரம் சரிசெய்யப்பட வில்லை. இதனிடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று மாலை முதல் மீண்டும் தொடங்கியது.