சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயக்கம்- ஜனவரியில் சேவை தொடங்கும்
சென்னை: கோயம்பேடு - நேரு பூங்கா இடையே 8 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் நேற்று வெற்றிகரமாக இயக்கப் பட்டது. ரயில் நிலையங்களில் காற்றோட்டம், வெளிச்சத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. வரும் ஜனவரியில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகர் முழுவதும் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை வரும் 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைந்து, பொதுமக்களின் முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் ராஜிவ் நாராயண் திவேதி கூறியுள்ளார்.
சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சோதனை முறையில் இயக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயம்பேடு -செனாய் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை சுரங்கப்பாதையில் வரும் ஜனவரியில் தொடங்கும். அதன் பின்பு செனாய் நகரில் இருந்து நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை விரிவடையும் என்றார்.
மெட்ரோ ரயில் பயணம்
நேரு பூங்கா முதல் எழும்பூர் வரை சுரங்கப்பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும். அதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை முதல் சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு, சென்னை சென்ட்ரல் முதல் - விமான நிலையம் என 52 கிலோ மீட்டருக்கான முழுமையான மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை, 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார். அப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு பயணி ரூ.70 கட்டணமாக செலுத்தி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என்றார் ராஜிவ் நாராயண் திவேதி.
மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்
சென்னையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுரங்கப் பாதைகளில் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர். வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை முதல் பாதையிலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2ஆவது பாதையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பணிகள் தீவிரம்
முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை, சைதாபேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன. இரண்டாவது வழித்தடத்தில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம் என 9 ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 19 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சோதனை ஓட்டம்
கோயம் பேட்டில் இருந்து நேரு பூங்கா வரை யில் மொத்தம் 8 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் களை இயக்க, கடந்த சில மாதங்க ளாக சோதனை ஓட்டம் நடத்தப் பட்டு வருகிறது. இதற்கிடையே, செய்தியாளர்களுக்கான சிறப்பு பயணத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை 3.14 மணிக்கு புறப்பட்ட மெட்ரோ ரயிலை எம்.கார்த்திகை செல்வன் என்பவர் ஓட்டிச் சென்றார்.
சிறப்பு ஏற்பாடுகள்
6 மீட்டர் அகலத்தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சென்றது. சத்தம், அதிர்வுகள் இல்லாமல், சுரங்கத்தில் 30 முதல் 35 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் சென்றது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் (சுரங்கம்), வி.கே.சிங் திட்ட இயக்குநர் திரிவேதி, தலைமை பொதுமேலாளர் (எலக்ட்ரிக்கல்) ராமசுப்பு ஆகியோர் இந்த ரயிலில் பத்திரிகையாளர்களுடன் பயணம் செய்தபடி மெட்ரோ ரயில் பாதைகள் பாதுகாப்பு, ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
சுரங்கப்பாதையில் ரயில்
கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் டவர், ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா வரையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. சுரங்க ரயில் நிலையங்களுக்கு தலா 4 ராட்சத மின்விசிறிகள் மூலம் காற்றோட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த ராட்சத மின்விசிறிகள், வெளியே இருந்து உள்ளே காற்றை இழுத்து உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றுகின்றன. சுரங்க ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் வந்து நிற்கும்போது கண்ணாடி அறைக்குள்ளே வருவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் யாரும் அத்துமீறி சுரங்க தண்டவாளத்தில் நுழைந்து விடாமல் தடுக்கப்படும்.
பயணிகள் பாதுகாப்பு
சுரங்க ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நிற்கும்போது ரயிலின் கதவு திறக்கும் அதேநேரத்தில் கண்ணாடி கதவுகளும் திறக்கும். ரயிலின் கதவுகள் மூடிய பின்பு கண்ணாடி கதவுகளும் மூடிக்கொள்ளும். இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
பாதுகாப்பு வழி
மெட்ரோ ரயில் சுரங்கத்தில் ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியிலும் பாதுகாப்பு நுழைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலைய சுரங்கத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெட்ரோ ரயில் நிறுத்தப்படும். பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி சுரங்கத்தில் இருக்கும் பாதுகாப்பு நுழைவில் சென்று வெளியே செல்லும் வகையில் இந்த வழி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நுழைவு அருகில் இருக்கும் அடுத்த மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.