சென்னை மக்களின் குடிநீர் சப்ளை இடமாக மாறிய கல்குவாரிகள்...தொடங்கியது சோதனை ஓட்டம்!
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சிக்ராயபுரம் கல் குவாரியில் இருந்து குடிநீர் எடுக்கும் பணி துவங்கியுள்ளது.
சென்னை: சென்னை புறநகர் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்து தினமும் 3 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கும் திட்டத்தின் சோதனை ஓட்டம் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், சென்னைக்கு நீராதாரமாக விளங்கும் 4 பிரதானமான ஏரிகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. நாளுக்கு நாள் குடிநீர் பஞ்சம் அதிகரித்த வண்ணமே உள்ளது. நாளை முதல் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் மக்கள் விடுமுறை முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் மாற்று குடிநீர் ஆதாரங்களைத் தேட வேண்டிய கட்டாயம் குடிநீர் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை புறநகர் சிக்கராயபுரம் பகுதியில் உள்ள 22 கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீரை, குடிநீராக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராட்சத குழாய்கள் பொருத்தம்
கல்குவாரியில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்துக்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர் அதிகம் உள்ள குவாரியில் 450 குதிரைத் திறன் கொண்ட ராட்சத மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், அங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரி அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குடிநீரை அனுப்புவதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியது.
தற்காலிக முயற்சி
இந்தப் பகுதிகளில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட குவாரிகளில் இருந்து 3 ஆயிரம் மில்லியன் லிட்டருக்கும் அதிகமான நீர் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதியில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் நீர் வீதம், 100 நாட்களுக்குத் தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்படும் நீர்
கல்குவாரிகளில் இருந்து கொண்டு செல்லப்படும் நீர் செம்பரம்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று அங்கிருந்தே விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்குள்ள 22 குவாரிகளில் தோராயமாக 3 ஆயிரம் மில்லியன் லிட்டருக்கும் அதிகமான நீர் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டம்
தற்போது சோதனை ஓட்டத்தில் தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் குழாயில் நீர் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அதை நிவர்த்தி செய்து, அடுத்து வரும் நாட்களில், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவாறு, தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட உள்ளது.