மவுலிவாக்கம் விபத்தில் மீட்கப்பட்ட கை, கால் – உரிமை கோர யாரும் இல்லை... பிணவறையில் பாதுகாப்பு!
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்தில் மீட்கப்பட்ட ஒரு கை, காலுக்கு சொந்தம் கொண்டாட ஆள் இல்லாததால் பிணவறையில் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனம் கட்டிய அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல் கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.
இந்த கட்டிடத்தில் மீட்கப்பட்ட ஒரு கை மற்றும் கால் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் விபத்து நடந்து 20 நாட்கள் ஆகியும் யாரும் உரிமை கொண்டாட உறவினர்கள் யாரும் வரவில்லை.
இதனால் பிணவறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தெரிவித்த மருத்துவர்கள், " கால், கையை வைத்து இது யாருடைய உடல் என்று உறுதி செய்ய முடியாது. ஏதேனும் முழு உடல் கிடைத்தால் அத்துடன் இந்த கை , கால்கள் ஒத்துப்போகிறதா என பரிசோதிக்கப்படும். இல்லாவிட்டால் இவற்றை பிணவறையில் பாதுகாப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்றனர்.