சென்னையில் நிகழ்ந்த கொலைகளே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்குக்கு உதாரணம் - டிகேஎஸ் இளங்கோவன்
கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு சென்னையில் நடைபெற்ற கொலைகளே உதாரணம் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேட்டில் யூனியன் பாங்க் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வங்கி பணியாளர்களின் 10-வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்திளார்களிடம் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், சட்டசபையில் ஆளுநர் உரையின் போது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடந்த கொலைகளே தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மனம் இருந்தால் சட்டசபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று கூறினார்.