சென்னை முதல் நெல்லை வரை.... சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை: நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்டது. மேலும், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டதால் சென்னையில் தங்கியிருந்து வேலை பார்ப்போர் தங்கள் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அதேபோல் தென்மாவட்டங்களில் உள்ளவர்கள் விடுமுறையை கொண்டாட சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஏற்கனவே விடுமுறையை கணக்கிட்டு அனைத்து டிக்கெட்டுக்களையும் பயணிகள் முன்பதிவு செய்து விட்டதால் ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பேருந்துகளில் பயணம் செய்யவும் பலர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதை கவனத்தில் கொண்டு நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 8, 14, 19, 24 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் 9, 15, 20, 25 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்படும்.
அதேபோல் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து 18 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்கள் குறித்த விவரம்:
ரயில் எண் 06021: மே 8 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06025: மே 14 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06026: மே 15 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எண் 06027: மே 24 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06028: மே 25 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரயில் எண் 06022: மே 9 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எண் 06023: மே 19 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06024: மே 20 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்:
ரயில் எண் 06029: மே 17 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06030: மே 18 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம். விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.