சென்னை களங்கரை விளக்கம் முதல் கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் 2025ல் ஓடும்
சென்னையில் 107 கிலோ மீட்டருக்கு புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யபடவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
சென்னை: சென்னையில் மேலும் 107 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜப்பானிய தொழில் நுட்பத்துடன் மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
சென்னையில் கடந்த பத்தாண்டுக்கு முன்பு இருந்த போக்குவரத்து நெரிசல் தற்போது இல்லாத நிலைக்கு முக்கிய காரணம் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலங்களும், மெட்ரோ ரயில் சேவையும் தான். தற்போது விமான நிலையம், நேரு பூங்கா, கோயம்பேடு, சின்னமலை என்று பல வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மெட்ரோ ரயில் சேவை சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு தற்போது செயல்பட்டு வரும் நிலையில், இதனை மேலும் அதிகரிக்கவும், புதிய திட்டங்களை செயல்படுத்தவும் மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது
மெட்ரோவின் தற்போதைய திட்டம்
சென்னையில் தற்போது குறைந்துள்ள போக்குவரத்து நெரிசலை மேலும் குறைக்க மெட்ரோ ரயில்நிர்வாகம் பல திட்டங்களை வகுத்து வருகிறது. வட சென்னையையும் தென் சென்னையையும் இணைக்கும் விதமாக வண்ணாரப்பேட்டை- விமானநிலையம், சென்டிரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
புதிய மெட்ரோ திட்டம்
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியில் புதிதாக 107.55 கிலோ மீட்டா தூரம் கொண்ட புதிய வட்ட மெட்ரோ ரெயில் பாதை கண்டறியப்பட்டு உள்ளது. மாதவரம்- சிறுசேரி இடையே 45.81 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 3-வது பாதையில் 19.09 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையும், 26.72 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது.
மெரினாவில் மெட்ரோ
மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் கோயம்பேடு பஸ் நிலையம் இடையே 17.12 கி.மீ. தூரம் கொண்ட 4-வது பாதை முற்றிலும் சுரங்கப்பாதையில் அமைக்கப்படுகிறது. இதேபோல மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 44.62 கி.மீ. தூரம் கொண்ட 5-வது பாதையில் 7.49 கி.மீ. உயர்த்தப்பட்ட பாதையும், 37.13 கி.மீ. சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. ஆக மொத்தம் 107.55 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
80ஆயிரம் கோடி பட்ஜெட்
இந்த திட்டம் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கு தேவையான நிதியை வழங்குவது தொடர்பாக ஜப்பானில் உள்ள சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவன அதிகாரிகள், சென்னையில் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளை அண்மையில் சந்தித்து ஆலோசனை நடத்தி சென்றுள்ளனர்.
நிலம் கண்டறியும் பணி
இந்த புதிய மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனுமதி கிடைத்த உடன், இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை வருகிற மார்ச் மாதம் கோர சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான நிலத்தை கண்டுபிடித்து அவற்றை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய சுரங்கப்பாதை அமைப்பு
மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணி நடந்து வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் 116 மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைப்பதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை 10 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. தரைத்தளத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.150 முதல் ரூ.200 கோடி வரையிலும், சுரங்கப்பாதையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.500 முதல் ரூ.600 கோடி வரை செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
முதல்கட்ட மெட்ரோ பணிகள்
இந்த மெட்ரோ திட்டங்களில் முதல்கட்டமாக மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம்- கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.40 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் மாதவரம் முதல் கொளத்தூர் வரை சுரங்கப்பாதையும், கொளத்தூர் முதல் கோயம்பேடு பஸ் நிலையம் வரை உயர்த்தப்பட்ட பாதையும் அமைக்கப்பட உள்ளது.
10 ஆண்டுகள் திட்டம்
இந்த 107 கிலோ மீட்டர் தூர மெட்ரோ திட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைய பத்து ஆண்டுகள் ஆகும் என்றும், 2025-ம் ஆண்டுக்குள் சில வழித்தட பணிகள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெட்ரோ மூலமாக சென்னையின் அனைத்து பகுதிகளையும் இணைத்து, போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னையை உருவாக்குவதே லட்சியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.