மூன்றாம் பாலினத்தவர் பற்றிய திருநங்கை அப்சராவின் பதிவுக்கு பதில் சொல்லும் திருநங்கை கிரேஸ்பானு
சென்னை: இரவில் சென்னை எவ்வாறு உள்ளது என்ற அனுபவத்தை திருநங்கை அப்சரா தனது பேஸ்புக்கில் பகிர்ந்து உள்ளார். மூன்றாம் பாலினத்தவர் பாலியல் தொழிலில் ஈடுபடுவது பற்றியும் தன்னிடமே பலரும் என்ன விலை என்று கேட்டதையும் பதிவிட்டுள்ளார் அப்சரா. இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திருநங்கை கிரேஸ் பானு என்பவர், திருநங்கைகள் மீது அவ்வளவு அக்கறை காட்டும் தாங்கள் இவ்வளவு நாள் எங்கு சென்றீர்கள் என்று கேட்டுள்ளார்.
அப்சராவின் பதிவும் அதற்கு கிரேஸ்பானு பதிவிட்டுள்ள கருத்தையும் படியுங்கள் வாசகர்களே!
சென்னை நகரம் நடுநிசி இரவில் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட வேண்டும் என்பது எனது திட்டம். நீண்ட நாள் திட்டத்தின்படி அன்றையதினம் நண்பர் ஒருவருடன் இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம். லயோலா கல்லூரியைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் வழி நெடுக மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்புடன் பெண்கள் நிறைந்திருந்தனர். சொகுசு கார்களிலும், காஸ்ட்லி பைக்கிலும் வலம் வந்தவர்கள் அவர்களை வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அங்கே பேரம் நடந்து கொண்டிருந்தது.
காரில் இருந்து இறங்கிய நான் அங்கே நின்றிந்த ஒரு பெண்ணிடம் நான் வழக்கமான கேள்வி கேட்க அவரும் வழக்கமாக சொல்வதைப்போல் எங்களுக்கு யாரும் வேலை தருவதில்லை என்றார்.
நான் வேலை தருகிறேன் என்றேன். என்னைப் பார்த்து சிரித்து, கேலி செய்தனர். அப்போது அங்கு வந்த சிலர் என்னிடம் உனக்கு என்ன விலை எனக் கேட்டனர். வெறுப்பில் அங்கிருந்து நகர்ந்து சென்றேன்.
அப்போது அவ்வழியாக ஒரு ரோந்து வாகனம் வந்தது. அதிலிருந்த காவலர் ஒருவரிடம் இதெல்லாம் நிறுத்த மாட்டீர்களா சார் எனக் கேட்டேன். அவரது பதில் என்னை அதிர வைத்தது.
என்ன செய்ய மேடம், ஏதாவது சொன்னால் எங்களுக்கு சாபம் விடுகிறார்கள். செருப்புடன் துரத்துகிறார்கள் அதையும் மீறி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றால் போலீஸார் எங்களை பலாத்காரம் செய்துவிட்டனர் என புகார் கொடுக்கின்றனர். அதனால் அமைதியாகவே இருந்துவிடுகிறோம் என்றார்.
மவுனத்தோடு அங்கிருந்து நகர்ந்தோம். அடுத்தடுத்ததாக 4 பகுதிகளுக்குச் சென்றோம். மெரினாவின் நேப்பியர் பாலம் அருகே நடந்த சம்பவம் என்னை ஆத்திரப்பட வைத்தது. ஆனால் என்னால் ஏதும் செய்ய இயலவில்லை.
சைக்கிளில் குழந்தையுடன் வந்த ஆசாமி சாலையில் நின்றிருந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் பாலத்துக்கு அடியில் சென்றுவிட்டார். குழந்தையே இருட்டில் செய்வதறியாது அழுது கொண்டிருந்தது.
மீண்டும் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தேன். அதே பதில் "மேடம், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று இவ்விடத்திலிருந்து துரத்திவிடுவோம். நாளை வேறு ஒரு இடத்தில் இதே வேலையை செய்வார்கள். கைது செய்தால் அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்வார்கள்" என்றார்.
இரவு இன்னும் நீண்டு செல்ல மூன்றாம் பாலினத்தவரை நினைத்து வெட்கிப் போனேன். அவர்களுக்காக வருந்துகிறேன். ஆனால், இத்தகைய செயல்களை செய்வதால் எப்படி சமூகத்தில் மரியாதையும், சம அந்தஸ்தும் கோர முடியும். பாலியல் தொழிலின் அடையாளமாக இருந்து கொண்டே வேலை வாய்ப்பில் எப்படி உரிமை கோர முடியும். பாலியல் தொழிலில் இருந்து விடுபட்டுவந்தால் அல்லவா வெகுஜனத்தோடு இயைந்து வாழ முடியும்.
இது சரியான தருணம். இப்போதே இவர்கள் அனைவருக்கும் சரியான வழிகாட்டுதலை தர வேண்டும். கண்டிப்புடன் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் கூடிய விரையில் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இந்த சமூக விரோத செயலால் நிரம்பிவிடும். அவர்கள் தங்களது சுயமரியாதையை உணர வேண்டும். மேலும் இத்தகைய பாலியல் தொழிலால் விளையும் ஆரோக்கிய கேடு குறித்தும் நான் கவலை கொள்கிறேன்.
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஆண் காவலர்கள் இவர்களை கைது செய்வதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டால் பெண் காவலர்கள் கைது செய்யட்டும். ஒவ்வொரு முறை பிடிபடும்போதும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். பாலியல் தொழிலை தடுத்து நிறுத்துவதில் காவலர்கள் துணிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்சராவின் பதிவுக்கு பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வலுகின்றனர். திருநங்கை கிரேஸ் பானு பதிலுக்கு பதிவிட்டுள்ளார்.
திருநங்கைகள் பற்றி அக்கறை காட்டும் தாங்கள் இத்தனை நாட்களாக எங்கு சென்றிருந்தீர்கள் என்று அவர்களுக்கு, பணியிடம் பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டது உண்டா என்றும் கேட்டுள்ளார். திருநங்கைகளை அப்சரா அவமானப்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார் கிரேஸ் பானு.
எம் சமூகம் காலகாலமாக பாலியல்தொழிலையும் ,பிச்சையெடுத்தலையும் தான் செய்துகொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது உங்கள் மேட்டுகுடி சிந்தனைக்கு இப்பொழுதுதான் தெரிகிறதோ? .சும்மா ஏதோ புழம்பவேண்டும் என்பதற்காக தங்கள் பத்திரிக்கை சூழ்ச்சியை எம் சமூக மக்கள்மீது திணிக்காதிர்.
அவ்வளவு அக்கறை இருந்தால் எம் சமூக மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வாங்கிகொடுங்கள்,கல்வி வாங்கிகொடுங்கள் ,இடஒதுக்கீடு வாங்கி கொடுங்கள்,வீடு வாங்கிகொடுங்கள் இவைகளெல்லாம் என்றைக்கு கிடைக்கப்பெறுகிறதோ அன்றைக்கு கேளுங்கள் ஏன் பாலியல் தொழில் செய்கிறீர்கள் என்று அதை விட்டு விட்டு தங்கள் மேட்டுகுடி வர்க்க சிந்தனையில் எம் அடித்தட்டு மக்களை தாக்காதீர்கள்.
தாங்கள் பெற்றோர்களால் விரட்டப்பட்டீர்களா???ஒதுக்குதலையும் ,ஒடுக்குதலையும் அனுபவித்திதுக்கிறீகளா???வீடு கிடைக்காமல் அழைந்திருக்ககிறீர்களா??? இதையல்லாம் அனுபவித்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும் ஏன் என் சமூக மக்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று கேட்டுள்ளார் கிரேஸ் பானு.