எண்ணூரில் மட்டும் கச்சா எண்ணெய்யை அகற்ற இன்னும் 10 நாட்கள் ஆகும் - கடலோர காவல்படை ஐஜி
கப்பல்கள் விபத்தால் கடற்பரப்பில் பரவியுள்ள கச்சா எண்ணெய்யை அகற்ற இன்னும் 10 நாட்கள் ஆகும் என கடலோர காவல்படை ஐஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: எண்ணூர் பகுதியில் பரவியுள்ள கச்சா எண்ணெய்யை அகற்ற இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும் என கடலோர காவல்படை ஐஜி தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் துரிதாமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்கி வைத்த கப்பலும் மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் எண்ணெய் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் முழுவதும் கடற்பரப்பில் பரவியது.
எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை கடற்பரப்பை ஆக்கிரமித்துள்ள கச்சா எண்ணெய்யை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
12 நாட்களுக்கு மேல் ஆகும்
இந்நிலையில் எண்ணூர் துறைமுகத்தில் மட்டும் உள்ள கச்சா எண்ணெய்யை அகற்ற 10 முதல் 12 நாட்களுக்கு மேல் ஆகும் என கடலோர காவல்படை ஐஜி ராஜன் பர்கோத்ரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கடந்த 28ஆம் தேதி விபத்து ஏற்பட்டவுடன் ஹெலிக்காப்டர் மூலம் கச்சா எண்ணெய் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது உடனடியாக பார்க்கப்பட்டது.
கண்காணிப்பு பணியில் 19 ஹெலிக்காப்டர்கள்
கடலோர காவல்படையினர் எண்ணெய்யை பிரித்தெடுக்கும பணியில் ஈடுபட்டுள்ளனர். சூழ்நிலையை கண்காணிக்க 19 ஹெலிக்காப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
90% கச்சா எண்ணெய் அகற்றம்
வட சென்னை பகுதியில் 90 சதவீத கச்சா எண்ணெய் அகற்றப்பட்டுள்ளது. எண்ணூர் பகுதியை மட்டும் சுத்தம் செய் 10 லிருந்து 12 நாட்கள் வரை ஆகும். இவ்வாறு கடலோர காவல்படை ஐஜி ராஜன் பர்கோத்ரா தெரிவித்துள்ளார்.
மெரினா நாளைக்குள் தூய்மையாகும்
"பாறைகள் மற்றும் மணலில் அதிகளவு கச்சா எண்ணெய் படிந்துள்ளது. மெரினா கடற்பகுதியில் படிந்துள்ள கச்சா எண்ணெய் நாளைக்குள் சுத்தம் செய்யப்படும்.
ஆர்கே.குப்பம் பெரும் சவாலாக உள்ளது
ஆர்கே.குப்பம் பகுதியில் அதிகளவு கச்சா எண்ணெய் படந்துள்ளது. இதனை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இன்று வரை ஆர்கே.குப்பம் பகுதியில் இருந்து 72 டன் கச்சா எண்ணெய் அகற்றப்பட்டுள்ளது.
170 டன் கச்சா எண்ணெய் குவிந்துள்ளது
பீச் பகுதியில் இருந்து 42 டன் கச்சா எண்ணெய் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 170 டன் கச்சா எண்ணெய் அப்பகுதியில் குவிந்துள்ளது". இவ்வாறு ராஜன் மல்கோத்ரா தெரிவித்தார்.
கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும்
இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர். இதனை அகற்றுவதற்கான சிறந்த வழியையும் கூறியுள்ளனர். இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு எண்ணெய் வெளியேறுகிறது
கப்பலில் இருந்து வெளியேறும் எண்ணெயின் அளவு எவ்வளவு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விபத்து பெரிது என்றும் கப்பலில் இருந்து வெளியேறும் எண்ணெயின் அளவு குறைவு என்றும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.