சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்.. மண்டை உடைப்பு.. பதற்றம்!
சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கல்லூரி முதல்வர் காளிராஜின் மண்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் கல்லூரி வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பேருந்து தினம் கொண்டாட முயன்றுள்ளனர். இதனை தடுத்த கல்லூரி நிர்வாகம் மாணவர்களை கல்லூரிக்குள் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அப்போது உள்ளே நுழைந்த மாணவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு முதல்வர் காளிராஜ் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலர் காளிராஜ் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் கல்லூரி முதல்வர் காளிராஜின் மண்டை உடைக்கப்பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக 36 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களில் 6 பேர் மட்டுமே மாணவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.