சென்னை ரிசர்வ் வங்கியில் புதிய ரூ.500 நோட்டு வினியோகம் - மக்கள் மகிழ்ச்சி
சென்னை ரிசர்வ் வங்கியில் இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர்.
சென்னை: கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து தங்கள் கைவசம் வைத்திருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் கடந்த 24ம்தேதி வரை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி வந்தனர்.
செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், அதனை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து பொதுமக்கள் எடுத்து வருகின்றனர். வங்கி கணக்கு இல்லாதவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதிய கணக்கை தொடங்க பல்வேறு அடையாள அட்டைகளை கேட்பதால் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் இன்று மக்களுக்கு கொடுக்கப்பட்டன. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெற்றுக்கொண்டு ரூ.2000 சில்லறை நோட்டு கொடுக்கப்பட்டன. 1000 ரூபாய்க்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் மீதமுள்ள 1000 ரூபாய்க்கு ரூ.10 சில்லறை நாணயங்களும் வழங்கப்பட்டன.
அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு பொது மக்களுக்கு பணம் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியில் புதிய ரூ.500 நோட்டு வாங்குவதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்று வாங்கிச் சென்றனர்.
ரிசர்வ் வங்கியில் இருந்து ஒவ்வொரு வங்கிகளுக்கும் குறைந்த அளவில் புதிய 500 ரூபாய் நோட்டு அனுப்பப்பட்டன. புரசைவாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு இன்று ரூ.8 லட்சம் பணம் வந்தது. இதில் ரூ. 1 லட்சம் மதிப்பிற்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்கிக்கு குறைந்த அளவு பணம்வருவதால் வாடிக்கையாளர்களை சமாளிப்பது பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று தெரிகிறது என்று வங்கி மேலாளர் கூறியுள்ளார்.