சென்னையில் மழை, மழை வெளுத்து வாங்கிய பேய் மழை.. திரும்பிய பக்கமெல்லாம் வாகன நெரிசல்!
சென்னையில் இன்று காலை முதல் அடித்து விளையாடும் வடகிழக்குப் பருவமழையால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
Recommended Video
சென்னை : சென்னையில் இன்று காலை முதல் வெளுத்து வாங்கிய வடகிழக்குப் பருவமழையால் நகரின் பிரதான சாலைகளில் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து சென்றன.
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் சென்னை மற்றும் தமிழகத்தின் நாகை,கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் நேற்று மாலை முதல் உணர்ந்து வருகின்றன. காலையில் சரியாக பள்ளி, அலுவலகம் செல்லும் நேரத்தில் விடாமல் கொட்டித் தீர்த்தது மழை.
இதனால் இன்று காலை முதலே வாகன ஓட்டிகளுக்கு சிரமத்திற்கு மேல் சிரமம் தான். ஒருபக்கம் வாகன நெரிசல் மற்றொரு புறம் வெளுத்து வாங்கிய மழை என இரண்டு இக்கட்டுகளையும் கடந்து பலர் அலுவலகம் சென்றனர்.
தாமதமாக அலுவலகம்
எனினும் மழை காரணமாகவும், சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததாலும் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. காலை முதலே சென்னை நகரின் சாலைகளில் வாகனங்கள் ஊஊர்ந்து சென்றன. இதனால் காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்டவர்கள் 12 மணியளவில் தான் அலுவலகம் சென்றடைய நேரிட்டது.
மாலையிலும் நெரிசல்
தொடர்ந்து விட்டு விட்டு பெய்த மழை 4 மணிக்குப்பிறகு சற்று ஓய்ந்த நிலையில் மாலை 5.30 மணியையே இரவு போல மாற்றும் வகையில் கருமேகம் வானைச் சூழ்ந்து சென்னை மக்களை பீதிக்கு ஆளாக்கியது. பலரும் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வேளையில் தொடங்கிய மழையால் மீண்டும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எங்கெங்கே தெரியுமா?
அண்ணாசாலை மேம்பாலம் முதல் எஸ்ஐடி சிக்னல் வரையில் வாகனங்கள ஊர்ந்தே சென்றன. இதே போல் நந்தனம் தேவர் சிலை முதல் சின்னமலை வரையிலான சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து செந்நீர்குப்பம் வழியாக வேலப்பன்சாவடி செல்லும் சாலையிலும் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. இதே போன்று கிண்டி, அசோக் நகர், சூளைமேடு, ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அம்பத்தூரில் பெருக்கெடுத்த மழை
சென்னை மநாகர போலீசார் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை வழங்கினர். இதே போன்று ஐடி அலுவலகங்கள் நிறைந்துள்ள வேளச்சேரி, மத்திய கைலாஷ், பெருங்குடி உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பத்தூரில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இன்றைய சென்னை மழை பொதுமக்களை ஒருகை பார்த்துவிட்டது.