சென்னையில் 3-வது நாளாக தொடரும் அவலம்... ஏ.டி.எம்., பெட்ரோல் பங்குகளில் நிரம்பிவழியும் கூட்டம்
சென்னை: சென்னையை உருக்குலைத்த வரலாறு காணாத மழை வெள்ளம் மக்களின் அன்றாட வாழ்க்கையை மிக மோசமாக முடக்கியும் வருகிறது. ஏ.டி.எம்.கள் செயல்படாததாலும் பெட்ரோல் பங்குகளில் டீசல், பெட்ரோல் கிடைக்காததாலும் சென்னைவாசிகள் சொல்லி மாளமுடியாத துயரில் இருக்கின்றனர். மாடாய் உழைத்து சம்பாதித்த பணம் மெஷினில் மாட்டிக் கிடக்க மானத்தைவிட்டு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சென்னை மக்கள்.
சென்னை நகருக்குள் ஊடுருவிய பெருமழை வெள்ளத்தால் வீடுகளை, கடைகளை, அலுவலகங்களை, ஏ.டி.எம்.களை என அனைத்தையும் ஒரேயடியாக மூழ்கடித்துச் சென்றுவிட்டது. வெள்ளம் வந்த வழி திரும்பிவிட்டது.
மழையோ போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது... மெல்ல தலைகாட்டி உணவு, உடைக்கு ஏற்பாடு செய்யலாம் என எட்டிப்பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி பாடாய்படுத்துகிறது பணம்... ஆம் ஏ.டி.எம். கிளைகள் பெரும்பாலானவை செயல்படவில்லை. செயல்படும் இடங்களில் பல மணிநேரம் காத்திருந்தாக வேண்டிய நிலை. மாடாய் உழைத்த பணம் இப்படி மெஷினில் சிக்கிக் கொள்ள உடனடி தேவைகளுக்காக 1,000 2,000 கைமாத்தாக கடனுக்கு கையேந்தும்நிலை..
இதேபோல் பெட்ரோல், டீசல் கிடைக்கும் பங்குகளை தேடி தேடி ஓய்ந்து போகும் நிலை... அப்படி ஸ்டாக் வைத்திருக்கும் பங்குகளிலும் பல மணிநேரம் காத்திருப்பு..
கையில் கிடைத்த காசைக் கொண்டு பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கப் போனால் அங்கும் கூட்டம்... விலையோ மலைக்க வைக்கிறது..
அரசுதான் உதவி மையங்களை திறக்கவில்லை.... இதனால் தேடித் தேடி வரும் தன்னார்வலர்களுக்காகத்தான் காத்திருக்க வேண்டிய அவலம்..
இப்படி தொடர்ந்தும் 3-வது நாளாக வெள்ளம் சுமத்திவிட்டு சென்ற பேரவலத்தில் இருந்து மீளமுடியாதவர்களாக தத்தளித்து வருகின்றனர் சென்னைவாசிகள்.