காதலர் தின கொண்டாட்டங்களுக்கு “நோ தடை”– பலத்த பாதுகாப்புடன் பச்சைக் கொடி காட்டியுள்ள போலீஸ்
சென்னை: சென்னையில் காதலர் தினமான இன்று அக்கொண்டாட்டங்களுக்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று போலீசார் அறிவித்துள்ளனர். மேலும், அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர்களால் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
உற்சாக கொண்டாட்டம்:
காதலர்கள் இந்த காதலர் தினத்தை நட்சத்திர ஓட்டல்கள், பூங்காக்கள், மெரினா போன்ற கடற்கரை பகுதிகளில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.
புதிதாய் மலரும் காதல்:
புதிதாக காதலை சொல்பவர்களுக்கும் இன்றைய தினம் ஒரு சிறந்த வாய்ப்பாகவும் கருதப்படுகின்றது.
கலச்சார சீர்கேடு:
காதலர்தின கொண்டாட்டங்களுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் சில இந்து அமைப்புகள் காதலர் தினத்தை கலாசார கேடு தினம் என்று வர்ணித்து அதை தடை செய்ய வேண்டும், என்றும் கேட்டுக்கொண்டுள்ளன.
கழுதைக்கு கல்யாணம்:
காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில் கழுதைக்கும், கழுதைக்கும் கல்யாணம் செய்து வைப்பது, கழுதைக்கும், நரிக்கும் திருமணம் முடிப்பது போன்ற நிகழ்வுகளை இன்று நடத்திக்காட்ட சில அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
கொண்டாட்டங்களுக்கு "நோ" தடை:
ஆனால் சென்னை நகர போலீசாரை பொறுத்தமட்டில், காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை எதுவும் விதிக்கவில்லை. ஆனால் வன்முறை, ஆபாசம் எதுவும் இல்லாமல் காதலர் தின விழாக்களை நடத்தலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநாகரிகம் செய்யாதீர்கள்:
காதலர் தினவிழா என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் அநாகரிகமாக நடத்தல், ஈவ்டீசிங் செய்தல் போன்றவற்றை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு:
காதலர்களை அத்துமீறி தாக்க முற்படுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காதலர்தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காதல் மழையும், முத்த மழையும்:
இந்நிலையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடையில்லாத காரணத்தினால் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் மெரினாவில் குவிந்தனர் காதல் ஜோடிகள். மெய்மறந்தவாரே ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டும், முத்தமழை பொழிந்த வண்ணமும் காதலர் தின கொண்டாடங்களிலாலும், காதலர்களாலும் மெரினா கடற்கரையே கலர் பூசிக் கொண்டு காணப்படுகின்றது.