தீபாவின் கார் ஓட்டுநராக இருந்த ராஜா திடீர் கைது- காவல்நிலையத்தில் தீபா தர்ணா!
தீபாவின் கார் ஓட்டுநர் ராஜா திடீரென கைது செய்யப்பட்டார்.
சென்னை: எம்ஜிஆர் அம்மா பேரவையின் பொதுச்செயலாளர் தீபாவின் கார் ஓட்டுநராக இருந்த ராஜா நேற்று திடீரென போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி காவல் நிலையத்தில் போலீசாருடன் தீபா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஓட்டுநராக இருந்த ராஜாவை தமது நீண்டகால நண்பர் என கூறிவந்தார் தீபா. அவருக்கும் எம்ஜிஆர் அம்மா பேரவையில் பொறுப்பு வழங்கினார் தீபா.
இதனால் தீபாவுக்கும் கணவர் மாதவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாதவன் தனிக்கட்சி தொடங்கினார். பொதுமக்கள் முன்னிலையில் மாதவனை ஒருமையில் ராஜா விமர்சித்த போதும் தீபா வேடிக்கை பார்த்தார். பின்னர் தீபாவுடன் இணைந்துவிட்டதாக மாதவன் அறிவித்தார்.
திடீரென ராஜாவை எம்ஜிஆர் அம்மா பேரவையில் இருந்து நீக்குவதாக தீபா சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இந்நிலையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக ராஜாவை சென்னை தி.நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இத்தகவலை கேள்விப்பட்ட தீபா, காவல் நிலையத்துக்கு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.