விமானத்தில் வந்து சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட டெல்லி கொள்ளையர்கள் கைது!
சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட டெல்லி கொள்ளையர்கள் இருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை முழுவதும் 23 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்களை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர் டெல்லியைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் சந்தீப் என்னும் இரு கொள்ளையர்கள். இவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து இங்கு பெண்களிடம் கழுத்தில் இருக்கும் செயின்களைப் பறித்துக் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல் தற்போதும் விமனம் மூலம் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு, பல லட்சம் மதிப்புள்ள செயின்களைக் கொள்ளையடித்துள்ளனர்.
பிறகு, கொள்ளை அடித்தவுடன் டெல்லிக்கு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது சென்னை போலீசார் சஞ்சய் மற்றும் சந்திப்பை கைது செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் மனோகரன், ''டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்துள்ளோம்.
இவர்கள் இருவரின் மீதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும், செயின் பறிப்புக் கொள்ளையில் தொடர்புள்ள 3 பேரை கைது செய்ய சென்னை போலீசார் செல்லியில் முகாமிட்டுள்ளனர்'' என தெரிவித்தார்.
சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் அடுத்த மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் செயின் பறிப்பில் பல வருடங்களாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.