சென்னை போலீஸ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு- எஸ்.வி.சேகர் எங்கே?
நடிகர் எஸ்வி சேகர் எங்கே என போலீஸ் தேடி வருகிறது.
சென்னை: பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது எஸ்.வி. சேகர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை.
பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தட்டியது சர்ச்சையானது. இச்சம்பவம் தொடர்பாக திருமலை என்பவர் ஃபேஸ்புக்கில் மிக மோசமாக பதிவிட்டிருந்தார்.
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் இந்த பதிவை நடிகர் எஸ்.வி.சேகரும் தம்முடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் இப்பதிவை நீக்கிய எஸ்.வி.சேகர், மன்னிப்பு கேட்டார்.
இவ்விவகாரம் குறித்து எஸ்.வி.சேகர் மீது போலீசில் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. தற்போது எஸ்.வி.சேகர் அவர் வீட்டில் இல்லை என்றும் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வரவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே எஸ்.வி.சேகர் வீடு மீது தாக்குதல் நடத்தியதாக 30 பத்திரிகையாளர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.