தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:தீக்குளித்த இளைஞரை சந்தித்தப்பின் கமிஷனர் தகவல்!
தீக்குளித்த வாடகை கார் ஓட்டுநரை சென்னை போலீஸ் கமிஷனர் நேரில் சந்தித்து விசாரித்தார்.
Recommended Video
சென்னை: தீக்குளித்த வாடகை கார் ஓட்டுநரை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து விசாரித்தார். அப்போது தவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சென்னை தரமணி அருகே சீட் பெல்ட் போடாமல் கார் ஓட்டிய வாடகை கார் ஓட்டுநரை நான்கு போலீசார் சரமாரியாக தாக்கினர். இதனால் மனமுடைந்த அவர் வண்டியில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைத்து போலீசார் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடல் முழுவதும் கருகிய நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞரை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து விசாரித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர், இளைஞருக்கு நல்ல முறையில் சிகிச்சையளிக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இளைஞர் பேசுகிறார் என்ற அவர், தொந்தரவு செய்ய வேண்டாம் என அதிகம் பேசவில்லை என்றார். மேலும் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.