டுபாக்கூர் ஐடி அதிகாரி, ரவுடி பினு.. அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு அசத்தும் சென்னை போலீஸ்!
போலி ஐடி அதிகாரி, ரவுடி பினு என அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறது சென்னை போலீஸ்.
Recommended Video
சென்னை: போலி ஐடி அதிகாரி, ரவுடி பினு என அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு சென்னை போலீஸ் அசத்தி வருகிறது.
கடந்த சனிக்கிழமை ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் வீட்டிற்கு வந்த நபர் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதற்கான அடையாள அட்டையையும் அவர் காண்பித்தார்.
ஆனால் போலீஸ் விசாரிக்கவே சுவர் ஏறி குதித்து தப்பித்து ஓடினார் அந்த நபர். போலீசாரும், மீடியாக்களும் விரட்டவே நொடி பொழுதில் மாயமானார்.
மாதவன் தான் சொன்னார்
இந்நிலையில் நேற்று மாம்பலம் போலீஸில் சரணடைந்த அவர், தனது பெயர் பிரபாகரன் என்றும் தீபாவின் கணவர் மாதவன் தான் சினிமாவில் சான்ஸ் வாங்கி தருவதாக தன்னை நடிக்க சொன்னதாக கூறினார்.
பிரபாகரன் வீடியோ
தனக்கு ஐடி அதிகாரிக்கான அடையாள அட்டை மற்றும் சர்ச் வாரண்ட் ஆகியவற்றை முன்கூட்டியே கூரியர் செய்ததும் மாதவன் தான் என்றார் பிரபாகரன். மேலும் இப்போது நடிப்பது வெறும் ரிகர்சல்தான் என்று மாதவன் கூறியதாலேயே தான் அவ்வாறு நடித்ததாகவும் பிரபாகரன் வாக்குமூலம் அளித்தார். அந்த வீடியோவை நேற்று மீடியாக்களில் வெளியிட்டது சென்னை போலீஸ்.
தலைமறைவான பினு
இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது 75 ரவுடிகளை அலேக்காக தூக்கியது சென்னை போலீஸ். இதில் தலைமறைவான பினு உள்ளிட்ட பல ரவுடிகளை போலீசார் தேடி வந்தனர்.
சரணடைந்த ரவுடி பினு
பல ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் ரவுடி பினு மட்டும் போக்கு காட்டி வந்தார். இந்நிலையில் பினுவை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டதால் சென்னை அம்பத்தூர் காவல்நிலையத்தில் ரவுடி பினு சரணடைந்தார்.
சுகர் பேஷன்ட்
இந்நிலையில் ரவுடி பினு கெஞ்சும் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது சென்னை போலீஸ். தான் சுகர் பேஷன்ட் என்றும், தான் ஒன்றும் பெரிய ரவுடியெல்லாம் இல்லை என்றும் ரவுடி பினு கெஞ்சும் வீடியோ மீடியாக்களில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
அசத்தும் சென்னை போலீஸ்
போலி வருமான வரித்துறை அதிகாரி பிரபாகரன், ரவுடி பினு என தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு சென்னை போலீஸ் அசத்தி வருகிறது. ரவுடிகளை கொத்தாக அள்ளிய கையோடு அதிரடியாக செயல்படும் சென்னை போலீஸின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.