விநாயகர் சதுர்த்தி : சென்னையில் 2500 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி
சென்னை: சென்னையில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி 2,500 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். வருகிற 11ம்தேதி அன்று சென்னையில் பிரமாண்டமாக விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி திருவிழா வருகிற 5ம்தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி சென்னையில் தெருக்களில் விநாயகர் சிலைகள் வழிபாடு நடப்பது வழக்கம்.
கடந்த ஆண்டு 2,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டன. ஒரு வார காலம் வழிபாடு செய்யப்பட்ட பின்னர் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
2500 விநாயகர் சிலைகள்
இந்த ஆண்டும் அதுபோல 2,500 சிலைகள் வழிபாட்டுக்காக வைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அதிகபட்சம் 30 அடி உயரம் வரை சிலைகள் வைக்க போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்க அனுமதி கேட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
11ம்தேதி ஊர்வலம்
வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வருகிற 10 மற்றும் 11ம்தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்க போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்து முன்னணி உள்ளிட்ட முக்கியமான அமைப்புகள் சார்பில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள சிலைகள் ஊர்வலம் 11ம்தேதி அன்று நடைபெறும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி சென்னையில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
வகை வகையான விநாயகர்கள்
நிகழாண்டு கற்பக விநாயகர், வலம்புரி விநாயகர், மூன்று தலையுடன் கூடிய அனுமன் விநாயகர், பாம்பு விநாயகர், அன்னப்பட்சி விநாயகர் என பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் கரூர் மாவட்டத்திலிருந்து பரமத்திவேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. சிலைகள் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை விற்பனையாகின்றன. இதில் இந்து முன்னணி சார்பில் பரமத்திவேலூரில் 50 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுகின்றன. எந்தவித வேதிப் பொருள்களும் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுகின்றன.
விநாயகர் விசர்ஜனம்
திருச்செங்கோடு வட்டாரப் பகுதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் 7ம் தேதி இறையமங்கலத்திலும், கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்படும் சிலைகள் 12ம் தேதி அரப்பளீஸ்வரர் ஆலயம் அருகேயும், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்படும் சிலைகள் 8ம் தேதி மோகனூர் காவிரியாற்றிலும் விசர்ஜனம் செய்யப்படுகிறது. பரமத்திவேலூரில் 9ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்படும்.