நடிகர் ஜீவாவின் ரூ.1 கோடி நிலத்தை அபகரித்த வழக்கில் பெண் கைது
சென்னை: நடிகர் ஜீவாவுக்கு சொந்தமான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா மயிலாப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு தாம்பரம் ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியில் 2 ஆயிரத்து 697 சதுர அடியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
இந்நிலையில் ஜீவா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,
தாம்பரம் ராஜ கீழ்ப்பாக்கத்தில் கே.எம்.சி. கார்டன் என்ற பெயரில் எனக்கு 2 ஆயிரத்து 697 சதுரடி நிலம் உள்ளது. ரூ. 1 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு சோபன் என்பவர் போலி பத்திரம் தயாரித்து அபகரித்துக் கொண்டார். இது தொடர்பாக உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சோபனை கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி கைது செய்தனர். மேலும் நில அபகரிப்பில் தொடர்புடைய கோடம்பாக்கத்தைச் சேர்ந்த எலிசா ஆனந்த் என்பவரை போலீசார் தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.