இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியை சுட்ட குண்டு எங்கே? சென்னை போலீஸ் ஆய்வு.... எழும் சந்தேகங்கள்
பெரிய பாண்டியை சுட்டது யார்? என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையனை பிடிக்கச் சென்ற போது மதுரவாயல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீரமரணமடைந்தார். கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் படுகாயமடைந்தார். இவர்கள் இருவரையும் சுட்டது யார் என்று சென்னை தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், விசாரணை நடத்துவதற்காக ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ள சென்னை அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் நேற்று இரவு ஆய்வு நடத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை நான் நேரில் பார்வையிட்டேன். பெரிய பாண்டியனை சுட்டது யார்? என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார்.
குண்டு இன்னும் கிடைக்கவில்லை
பெரிய பாண்டியின் உடலில் பாய்ந்த குண்டு வெளியேறி விட்டது. சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து பார்த்ததில் அந்த குண்டு இன்னும் கிடைக்கவில்லை. அந்த குண்டு எங்கே என்று தேடி வருகிறோம். சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் நாதுராமும், அவரது நண்பர் தினேஷ் சவுத்ரியும் குற்றவாளிகள். இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட்ட வழக்கில் நாதுராம் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார். தினேஷ்சவுத்ரி அதில் சம்பந்தப்படவில்லை.
சென்னை அழைத்து வருவோம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வைத்து, அதிரடியாக ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள கடை ஒன்றில் திருட முயற்சித்தபோது தினேஷை மடக்கிப்பிடித்துள்ளனர். கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தினேஷ் சவுத்ரியை நாங்களும் கைது செய்து சென்னை அழைத்து வருவோம். விரைவில் நாதுராம் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளார்.
நாதுராமின் செல்போன் பேச்சு
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தனது உறவினர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த நாதுராம், தனது உறவினர்கள் நான்கு பேரையும் விடுவிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிரான புகாரை திரும்பப் பெறக்கோரி, நகைக்கடை உரிமையாளர் முகேஷ்குமாருடன் செல்போனில் பேசிய நாதுராம் ஆபாச வார்த்தைளில் திட்டியதோடு கொலைமிரட்டல் விடுத்துள்ளான். என் தந்தையையும், உறவினர்களையும் கைது செய்த போலீசை குடும்பத்தோடு கொல்வேன் என்றும் மிரட்டியுள்ளான்.
2 துப்பாக்கிகள்
இதற்காகவே சதி செய்து இன்பார்மர் மூலம் தனிப்படை போலீசாரை ராஜஸ்தானுக்கு வரவழைத்துள்ளான். இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டி, முனிசேகர் தலைமையிலான தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் நாதுராம் பதுங்கி உள்ள செங்கல் தயாரிக்கும் சூளைக்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் சென்றனர். இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டி மற்றும் முனிசேகரிடம் மட்டும் தான் துப்பாக்கி இருந்துள்ளது. மற்ற மூவரும் துப்பாக்கி எதுவும் இல்லாமல் சென்றுள்ளனர். இதுதான் கொள்ளையர்களுக்கு சாதகமாகி விட்டது.
பின்வாங்கி காவலர்கள்
செங்கல் சூளையை சுற்றிவளைத்த போலீசார், தூங்கி கொண்டிருந்த நாதுராமை பிடித்தனர். அப்போது நாதுராமின் சத்தம் கேட்டு பதுங்கியிருந்த உறவினர்கள் கற்களை வீசி தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க தனிப்படையினர் பின் வாங்க தொடங்கினர். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி மட்டும் நாதுராமை விடாமல் இழுத்து கொண்டு வந்தார்.
கீழே விழுந்த துப்பாக்கி
அப்போது இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கி கீழே விழாவே, அதை எடுத்து எடுத்து சரமாரியாக சுட்டான் நாதுராம். இதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் இடது மார்பு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். முனிசேகர் மற்றும் மற்ற போலீசாரையும் சுட்டு விட்டு தப்பி விட்டான் நாதுராம். பெரியபாண்டியின் உடலில் இருந்து துப்பாக்கி குண்டுகள் வெளியேறி விட்டது என்று தற்போது போலீஸ் கூறும் நிலையில் எத்தனை குண்டுகள் இருந்தன. அவை முனிசேகரின் துப்பாக்கியிலிருந்துதான் சுடப்பட்டவைதானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
துப்பாக்கி குண்டுகள் எங்கே
கொள்ளையர்கள் இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியை எடுத்து பெரியபாண்டியைச் சுடும்போது சக போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பெரியபாண்டி தற்காப்புக்காகத் தன்னுடைய துப்பாக்கியைப் பயன்படுத்தவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முனிசேகரின் துப்பாக்கி கீழே விழுந்தது எப்படி? தற்போது அந்தத் துப்பாக்கி யார் வசமிருக்கிறது? என்றும் சந்தேகத்தை எழுப்புகின்றனர். எது எப்படியோ ஒரு நேர்மையாக இன்ஸ்பெக்டரை பறிகொடுத்து விட்டது தமிழக காவல்துறை.