கமல்ஹாசன் மீது எந்த நேரத்திலும் வழக்கு பதிவு- அரசு வக்கீலுடன் போலீஸ் மும்முர ஆலோசனை!
சென்னை: நிலவேம்பு குடிநீர் விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து அரசு வழக்கறிஞருடன் சென்னை போலீசார் ஆலோசனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசனும் தமது நற்பணி மன்றம் மூலம் நிலவேம்பு குடிநீர் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பின்னர் திடீரென நிலவேம்பு குடிநீர் தருவதை நிறுத்துமாறும் நிலவேம்பு தொடர்பான ஆராய்ச்சி தேவை எனவும் கமல்ஹாசன் ட்வீட் போட்டிருந்தார். கமல்ஹாசனின் இந்த ட்வீட் பெரும் சர்ச்சையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான தகவலை வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கமல் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என அதிரடி உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து அரசு வழக்கறிஞருடன் சென்னை போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்ட வல்லுநர்களுடனும் சென்னை சைபர் கிரைம் போலீசார் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் கமல்ஹாசன் மீது சென்னை போலீஸ் வழக்குப் பதிவு செய்யக் கூடும் என தெரிகிறது.