சென்னையில் கடத்தப்பட்ட இரண்டரை வயது குழந்தை... 15 நாட்களுக்குப் பின் மீட்பு!
சென்னையில் கடந்த மாதம் 25ம் தேதி பெருங்குடி பகுதியில் கடத்தப்பட்ட இரண்டரை வயது ஆண் குழந்தை விஷ்வா 15 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளான்.
சென்னை : பெருங்குடி பகுதியில் கடந்த மாதம் கடத்தப்பட்ட இரண்டரை வயது ஆண் குழந்தை விஷ்வா 15 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளான். திருவேற்காடு பகுதியில் குழந்தையை மீட்ட போலீசார், விஷ்வாவை கடத்தி வைத்திருந்த மாணிக்கம் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
சென்னை பெருங்குடியில் கல்லுக்குட்டையைச் சேர்ந்த குரு-பிரேமலதா தம்பதியரின் இரண்டரை வயது ஆண் குழந்தை விஷ்வா. கடந்த டிசம்பர் 25ம் தேதி இரவு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த விஷ்வா திடீரென மாயமானதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் விஷ்வா குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் குரு, பிரேமலதா தம்பதியினர் போலீசாரிடம் புகார்அளித்தனர்.
குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் வீடு இருந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது விஷ்வாவை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்அழைத்து செல்வது தெரியவந்தது. இதனையடுத்து விஷ்வாவை கடத்தி சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த மர்மநபர் விஷ்வாவை அழைத்துக் கொண்டு அரசுப் பேருந்தில் ஏறிச் செல்லும் காட்சி மற்றொரு சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்ததை வைத்து போலீசார் குற்றவாளியைத் தேடி வந்தனர். குழந்தை கடத்தப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்று திருவேற்காடு பகுதியில் இருந்து விஷ்வாவை காவல்துறையினர் மீட்டுள்ளனர். விஷ்வாவை கடத்திச் சென்ற மாணிக்கம் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மாணிக்கம் தான் குழந்தையை கடத்தினாரா என்ன காரணத்திற்காக குழந்தை கடத்தப்பட்டது உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.