குடிச்சிட்டு வாகனம் ஓட்டியா புத்தாண்டு கொண்டாடுறீங்க... காவல்துறையின் நடவடிக்கை என்ன தெரியுமா?
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 125 பேருக்கு பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை : புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 125 பேருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்போர்கள் காவல்துறையின் தடையில்லா சான்று மற்றும் உறுதிச் சான்றிதழ் பெற்றால் மட்டுமே பாஸ்போர்ட்டை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 புது வருட பிறப்பையொட்டி டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தி விட்டு யாரும் வாகனத்தை ஓட்டக் கூடாது என்று காவல்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதே போன்று சென்னை மெரினா, பெசன்ட், நகர்,ஈசிஆர் சாலைகளில் நள்ளிரவு நேரத்தில் குடித்துவிட்டு பைக் ரேஸ்கள் நடத்தவும் போக்குவரத்து காவல்துறை தடை விதித்திருந்தது.
புத்தாண்டை விபத்து இல்லாமல் கொண்டாடுவதற்காக இந்த எச்சரிக்கையை காவல்துறை விடுத்திருந்தது. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக புத்தாண்டிற்கு முன்னரே காவல்துறை சார்பில் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
எனினும் புத்தாண்டு பிறப்பையொட்டி பலர் வாகனங்களில் சைலென்சர்களை திறந்துவிட்டு நள்ளிரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பலருக்கும் தொல்லைகளை தந்தனர். காவல்துறையின் கண்காணிப்பில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 125 பேர் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று காவல்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் அவர்களுக்கு இந்த தண்டனை கிடைத்துள்ளது.