ரோட்டோரம் நின்று கொண்டு அழைக்கக் கூடாது.. திருநங்கையருக்கு சென்னை போலீஸ் வார்னிங்!
திருநங்கைகள் பாலியலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: திருநங்கைகளின் மதிப்பீடுகள் தற்போதைய சமூகத்தில் உயர்ந்து காணப்பட்டு வருகின்றபோதிலும், சிலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவும், பரிதாபத்திற்குரியதாகவும், சில நேரங்களில் இழிநிலைகளுக்கு செல்பவையாகவும் கூட உள்ளன.
அதன்படி, ஒரு சில திருநங்கைகள், நுங்கம்பாக்கம் சாலைகளின் இரு புறமும் இரவு நேரங்களில் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையாகி வருகிறது. அத்தகைய சமயங்களில் அவ்வழியாக கார், பைக்கில் போகிறவர்களை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி அழைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே எழுந்து வந்தன.
இந்த திருநங்கைகளில் பெரும்பாலானோர் நன்றாக படித்தவர்கள். திறமை வாய்ந்தவர்கள். படிப்பு என்றால் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். இவர்களில் என்ஜினியரிங், எம்பிஏ, படித்தவர்கள் எல்லாம் உண்டு. ஆனால் அவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களை தர யாரும் முன்வராத காரணத்தினால் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னை மாநகர காவல்துறைக்கு இது தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை கட்டுப்படுத்த சென்னை நகர காவல்துறை முடிவு செய்தது. அதன்படி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தலாம் என்றும், அந்த ஆலோசனை கூட்டத்தில் திருநங்கைகளை அழைத்து பேசலாம் எனவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி சூளைமேடு பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் இதற்கான கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுமார் என்ஜினியரிங், எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, பிஎஸ்சி டிப்ளமோ படிப்புகளை படித்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். இதில் சிலர் நல்ல வேலையிலும் உள்ளனர்.
அவர்களிடம் போலீசார், இனிமேல் சாலையோரம் நின்றுகொண்டு யாரையும் பாலியல் தொழிலுக்கு அழைக்க கூடாது என்றனர். மீறி நடந்தால், கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் எச்சரித்தனர். வேண்டுமானால் இந்த தொழிலுக்கு மாற்றாக வேறு வேலை அதாவது, அழகுகலை நிபுணர், வரவேற்பாளர் என பல வேலைகள் உள்ளதாகவும் அவற்றினை மாற்று வேலையாக வாங்கிதர தயாராக தாங்கள் உள்ளதாகவும் திருநங்கைகளிடம் போலீசார் உறுதி கூறினர்.
போலீசார் கூறிய அனைத்தையும் பொறுமையுடன் கேட்ட திருநங்கைகள், இதுகுறித்து ஒன்றுகூடி தங்களுக்குள் பேசி முடிவெடுத்துவிட்டு சொல்கிறோம் என்று கூறிவிட்டு சென்றிருக்கின்றனர். இதையடுத்து அடுத்த 15 நாள் கழித்து மீண்டும் இது தொடர்பாக ஒரு கூட்டம் நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.