ஜெ. தடுத்த மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு விடிவுகாலம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு
Recommended Video
சென்னை: மதுரவாயல்- சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரைவில் துவங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
இற்கு ரூ1,816 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
தடுத்த ஜெ. அரசு
இதனிடயே 2011- ம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டன. சுமார், 19 கிமீ தூரமுள்ள இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தபோதும் 30 சதவீத பணிகள் முடிந்த நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் கூவம் ஆற்றின் போக்கை கெடுப்பதாக கூறி, ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை அத்திட்டத்திற்கு அனுமதி மறுத்து வந்தார்.
ஆரம்பித்த ஓபிஎஸ்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க உடன்பட்டார். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக திட்டம் தொடங்கவில்லை. இதையடுத்து பொறுப்புக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து விரைவாக செயல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியது.
எடப்பாடி அரசு துரிதம்
இந்நிலையில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம், தடையில்லா சான்று வழங்கியது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து, தமிழக அரசிடம் இதுதொடர்பாக பேசி வந்தனர். துறைமுக பகுதிகளில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் அறிவிப்பு
இந்த நிலையில் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்தப்போவதாக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். நல்ல திட்டம் என்று பலராலும் பாராட்டப்பட்டாலும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தடுத்து வைக்கப்பட்ட திட்டத்தை கையில் எடுக்கிறது தமிழக அதிமுக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.