சேகர் ரெட்டியிடம் பத்திரிகையாளர்கள் பணம் வாங்கினார்களாம்.. அவதூறுக்கு பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
சென்னை: பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் முயற்சி நடந்துள்ளது என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் அமைச்சர்கள் சிலர் லஞ்சம் பெற்றதாகவும் அது ஒரு டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், டைம்ஸ் நவ் ஆங்கில சேனல் நேற்று செய்தி ஒளிபரப்பியது.
இதன் அடிப்படையில் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
காகிதத்தை ஷேர் செய்தனர்
இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர்கள் சில சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்றதாக ஒரு டைரியில் எழுதப்பட்டிருப்பதாக கூறி ஒரு காகிதத்தை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பிரசாந்த் என்பவர் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
வருத்தம் தெரிவித்தார்
இதுகுறித்து சம்மந்தப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, படித்து பார்க்காமல் ஷேர் செய்துவிட்டதாகவும், அதை உடனே டெலிட் செய்துவிட்டதாகவும் கூறியதோடு நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை அசிங்கப்படுத்தும் முயற்சியை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பத்திரிகையாளர் மன்றம் கண்டித்துள்ளது. புதுச்சேரி பத்திரிகையாளர் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டைரி எழுதும் பழக்கமே இல்லை
இதனிடையே, ஏதோ ஒரு பேப்பரை காட்டி அமைச்சர்களுக்கு நான் லஞ்சம் கொடுத்ததாக செய்தி பரப்பப்படுவதாகவும், தனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை என்றும் சேகர் ரெட்டி பேட்டியொன்றில் கூறியுள்ளார்.