தமிழ் பிரபாகரனை மீட்கக் கோரி மத்திய அரசிடம் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள்
சென்னை: இலங்கையில் கைது செய்யப் பட்டுள்ள ம.க.தமிழ்ப்பிரபாகரனை மீட்கக் கோரி சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியுறவு அமைச்சகத்திற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
"ம.க. தமிழ் பிரபாகரன் விகடன் குழுமத்தின் 2011-12 ம் ஆண்டின் மாணவ பத்திரிகையாளராக தெரிவு செய்யப்பட்டவர். சிறந்த மாணவர் பத்திரிகையாளர் என்றும் தேர்வானவர். விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சி முடிந்தவுடன் விகடன் உட்பட பல்வேறு இதழ்களில் சுதந்திர செய்தியாளராக பணியாற்றி வந்தவர்.
தமிழ் பிரபாகரன், கடந்த 2012 ம் ஆண்டு இலங்கைக்கு சென்று வந்து இலங்கை தமிழ் மக்களின் நிலை பற்றி ஜூனியர் விகடன் இதழில் தொடர் எழுதினார், அந்த தொடர் தனி புத்தகமாகவும் வெளிவந்தது.
தற்போது மீண்டும் இலங்கை சென்ற அவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரிதரன் மற்றும் பசுபதிபிள்ளை ஆகியோருடன் கிளிநொச்சி பகுதியில் உள்ள தமிழ் மக்களை சந்திக்க சென்றுள்ளார்.
வலைப்பேடு கிராமத்திற்கு சென்றபோது அவரை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது இலங்கை ராணுவம். சிரிதரன் மற்றும் பசுபதி பிள்ளை ஆகியோர் விடுவிக்கப்பட்ட நிலையில் தமிழ் பிரபாகரன் மட்டும் ராணுவத்தின் பிடியில் வைதுக்கொள்ளப்பட்டுள்ளார் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், பயங்கரவாத தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவினரால அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, தாங்கள் இதில் தலையிட்டு ராஜாங்க ரீதியில் தமிழ் பிரபாகரன் பத்திரமாக விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.