குடி போதையில் விபத்தை ஏற்படுத்தியவர்.. ஜாமீனில் வெளி வந்து தேசிய கார் பந்தயத்தில் அசத்திய விகாஸ்!
கோவை: கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டி ஆட்டோ ஓட்டுனர் உயிரை பறித்த கார் பந்தய வீரர் விகாஸ் கோவையில் நேற்று நடந்த போட்டியில் பங்கேற்று 3வது இடம் பெற்றுள்ளார்.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வருபவர்களுக்கு மீண்டும் வாழ்வு வசப்பட சிறிது காலம் பிடிக்கும். ஆனால், கார் பந்தய வீரர் விகாஸ் ஆனந்துக்கு அப்படியில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னை ஆழ்வார்பேட்டையில் குடிபோதையில் கார் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்தில் ஆட்டோக்களின் மீது அவரது கார் ஏறியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறைக்கு சென்ற விகாஸ் ஆனந்த் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
3வது இடம்
நேற்று கோயமுத்தூர் மாவட்டம் கரிமேடு போட்டி களத்தில் நடைபெற்ற ஜெ.கே. தேசிய கார் பந்தையத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் விகாஸ். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் "இது போட்டிக்கான காலம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும், ஆனாலும் இன்னும் வேகமாக கார் ஓட்டும் நிலைக்கு சீக்கிரமே திரும்புவேன்" என்கிறார்.
மோசமான சம்பவம்
ஆட்டோக்களின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது குறித்து வெளிப்படையாக பேசத்தயங்கிய விகாஸ், "அது ஒரு மோசமான சம்பவம், ஆனால், அதிலிருந்து வெளியேறி பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன்" என்று பேட்டியில் கூறியுள்ளார். இந்த விபத்தால் சிறைத் தண்டனை கிடைத்தாலும் ஜாமீனில் வந்து கார்பந்தயத்தில் பங்கேற்றுள்ளார் 23 வயது விகாஸ்.
அனுமதி
விபத்தை ஏற்படுத்தியதால், இந்திய மோட்டார் விளையாட்டு கிளப், விகாஸின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருந்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அவர் கார் பந்தயங்களில் பங்கேற்க அந்த அமைப்பு அனுமதியளித்திருந்தது.
மறுப்பு
அதேபோல், சிறைவாழ்வு குறித்தும் விகாஸ் மனம் திறந்து பேசவில்லை. எனது குரு அக்பர் ஆபிரகாமின் ஆசியுடன் மீண்டும் எல்லா சிரமங்களைத்தாண்டி மீண்டும் நட்சத்திரமாக வலம் வருவேன் என்று கூறியுள்ளார் விகாஸ்.