பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உதவி செய்யும் கரங்களே இப்போது தேவை- நடிகர் விவேக்
சென்னை: "பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உதவி செய்யும் கரங்களே இப்போது தேவை" என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை தமிழக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் கடலூர் மக்களை இந்த மழை ரொம்பவே பாதித்து விட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பல்வேறு மக்களும் உதவிகள் செய்து வரும் நிலையில் நடிகர் விவேக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
விவேக்
சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த விவேக் தற்போது கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். நடிகன் என்பதைத் தாண்டி சமூகப் பணிகளிலும் அக்கறை காட்டுபவர் விவேக். அப்துல்கலாமின் சிந்தனை மற்றும் செயல்களால் ஈர்க்கப்பட்ட விவேக் கலாமின் வழிகாட்டுதல் படி சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தார்.
மகனின் மரணம்
சந்தோஷத்துடன் சென்று கொண்டிருந்த விவேக்கின் வாழ்க்கையில் கடந்த அக்டோபர் மாதம் விதி சோகத்தைக் கொண்டு வந்து சேர்த்தது. விவேக்கின் ஒரே மகன் பிரசன்னகுமார்(13) கடந்த அக்டோபர் மாதம் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் மகன் இறந்த ஒரு மாதத்திலேயே நடிகர் விவேக் தனது சோகத்தை மறைத்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.
ஹைதராபாத்
இங்கே மழை தீவிரமாகி மக்கள் துன்பங்களுக்கு ஆளானதைப் பார்த்த விவேக் தனது ட்விட்டரில் இப்படிப் பதிவு செய்தார். "நான் ஹைதராபாத்தில் சிக்கிக் கொண்டேன். மழையால் என் சக மக்கள் துன்பப்படுவதைக் காணும்போது எனது இதயத்தில் இருந்து ரத்தம் வழிகின்றது".
|
மக்களுக்கு உதவி
ஹைதராபாத்தில் இருந்து கடந்த 5 ம் தேதி திரும்பிய விவேக் உடனே நடிகர்கள் கார்த்தி, விஷால், குஷ்பூ சுந்தர் மற்றும் பிறருடன் இணைந்து மக்களுக்கு உதவிகளை செய்திட ஆரம்பித்தார். மேலும் "மழையால் தவிக்கும் மக்களுக்கு பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உதவும் கரங்களே இப்போது தேவை" என்று விவேக் குறிப்பிடுகிறார்.
உணவு மற்றும் பெட்ஷீட்
மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜாபர்கான்பேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் பெட்ஷீட் ஆகியவற்றை விவேக் வழங்கினார்.
|
புகைப்படங்கள் இல்லை
"மக்களின் துன்பத்தைக் காணும்போது மனதை என்னவோ செய்கிறது" என்று குறிப்பிடும் விவேக் மக்கள் உதவிகளைப் பெறுவதை புகைப்படங்கள் எடுத்துப் பதிவிடுவதில்லை. மேலும் தனது விருகம்பாக்கம் அலுவலகம் மூலமாகவும் உதவிகளை ஒருங்கிணைத்து விவேக் வழங்கி வருகிறார்.
|
வண்டி பாரம் குறைந்தது
"பாதிக்கப்பட்ட அசோக் நகர் அரங்கநாதன் பாலம் அருகே உள்ள மக்களுக்கு இப்போதுதான் இனிப்பான பன்களையும், குடிதண்ணீர் பாட்டில்களையும் வழங்கித் திரும்பினோம். வண்டியின் பாரம் குறைந்தது ஆனால் இதயம் கனக்கிறது" என்று சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
மழையால் தவிக்கும் சென்னை மக்களுக்கு தனது சோகங்களை மறந்து உதவிகள் செய்யும் விவேக் அவர்களின் நல்ல உள்ளம் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்!