மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் துணிகளைப் புதிதாக வாங்கி அளியுங்கள்- சுஹாசினி மணிரத்னம்
சென்னை: "மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய நினைப்பவர்கள் துணிகளைப் புதிதாக வாங்கி அளியுங்கள்" என்று நடிகை சுஹாசினி கூறியிருக்கிறார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மக்களும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் தாங்கள் பயன்படுத்திய உடைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இதனைக் கண்ட நடிகை சுஹாசினி மற்றவர்களுக்கு கண்ணியமாக உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
சென்னை மழை
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிக, நடிகையர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர். மக்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி அவர்களின் துயர் துடைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
|
சுஹாசினி - மணிரத்னம்
இதே போன்று சுஹாசினி - மணிரத்னம் தம்பதியரும் தங்களால் முடிந்த உதவிகளை சத்தமில்லாமல் மற்றவர்களுக்கு செய்து வருகின்றனர். உணவு, உடை மட்டுமின்றி அரிசி, மளிகைப்பொருட்கள் என்று ஒரு செட்டாக மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
|
சுஹாசினி
இந்நிலையில் நடிகை சுஹாசினி கோரிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்திருக்கிறார். "நீங்கள் பயன்படுத்திய உடைகளை மற்றவர்களுக்கு கொடுக்கும் முன்னர் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் ரேகா, வாணி கணபதி பயன்படுத்திய உடைகளை நான் அணிந்து இருக்கிறேன். என்னுடைய சகோதரிகள் என்னுடைய பழைய ஜீன்ஸை அணிந்து இருக்கிறார்கள். சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வரும் ஜெயஸ்ரீயும், உமா பத்மநாபனும் என்னுடைய ஆடைகளை மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி இருக்கின்றனர்.
தி.நகரில் இருக்கும்
ஆனால் தி.நகரில் இருக்கும் கலையரசியோ, முகப்பேரில் இருக்கும் பொன்மொழியோ என்னுடைய பழைய சேலைகள் மற்றும் உள்ளாடைகளை ஏன் அணிய வேண்டும்?
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு
நீங்கள் உங்கள் பழைய உடைகளை உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு அளியுங்கள். ஆனால் முன்பின் தெரியாத ஒருவருக்கு கொடுக்காதீர்கள்.உங்கள் பீரோவை சுத்தப்படுத்துவதற்கு இது நேரமல்ல.
120 ரூபாய்
ஒரு புது சேலை மிஞ்சிமிஞ்சிப் போனால் 120 ரூபாய்தான் அதனை வாங்கி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளியுங்கள். மற்றவர்களுக்கு உதவும்போது கவனமுடனும், கண்ணியத்துடனும் உதவுங்கள் என்று சுஹாசினி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சுஹாசினியின் இந்த கோரிக்கை நியாயமானது தான் என்று சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.