சென்னையில் பால் தட்டுப்பாடு... காய்ச்சிய பால் வழங்கி வயிற்றில் பால் வார்த்த நல்ல உள்ளங்கள்!!
சென்னை: ஆறுகளில் பொங்கிய வெள்ளத்தால் சாலைகள் மூழ்கி போக்குவரத்து தடைபட, பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. குழந்தைகளும், முதியவர்களும் பசியால் இருப்பதை அறிந்த தமிழ்நாடு பால் முகவர்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாலை காய்ச்சி இலவசமாக விநியோகம் செய்தனர்.
சென்னை அமைந்தகரை பகுதியில் காலை முதல் கொட்டும் மழையில் காய்ச்சிய பாலை வழங்கினர். அமைந்தகரை, ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு, எம்எம்டிஏ காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10மணியில் இருந்து மாலை 6மணி வரை பாலினை காய்ச்சி சுமார் 6ஆயிரம் பேருக்கு காய்ச்சிய பாலை வழங்கி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றில் பாலை வார்த்தனர்.
முடங்கிய உற்பத்தி
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வந்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டுள்ளதால் அங்கே பால் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது.
போக்குவரத்து தடை
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் உற்பத்தியாகும் சுமார் 4 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் முடங்கியது ஒருபுறம் இருக்க சாலையில் பெருகிய வெள்ளத்தால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் பாலும் தடைபட்டது.
பால் வரத்து குறைவு
சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வர வேண்டிய சுமார் 18 லட்சம் லிட்டர் பாலில் சுமார் 12 லட்சம் லிட்டர் பால் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கடுமையான தட்டுப்பாடு
இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் குறிப்பாக வட சென்னை பகுதியில் கொடுங்கையூர், எழில் நகர், ஆர்.கே.நகர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பால் விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உச்சத்திற்கு போன பால் விலை
இதனை பயன்படுத்திக் கொண்டு ஒரு சில சில்லறை வணிகர்கள், பொதுமக்களில் சிலர் பாலினை அதிக அளவில் பதுக்கி வைத்துக் கொண்டு மனிதாபிமானமற்ற முறையில் ஒரு பால் பாக்கெட்டினை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்தனர்.
காய்ச்சிய பால்
மனிதாபிமானமுடன் செயல் பட வேண்டிய இத்தருணத்தில் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டு வருபவர்களுக்கு மத்தியில் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் பாலை காய்ச்சி இலவசமாக விநியோகம் செய்தனர்.
1000 லிட்டர் பால்
வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளதால் பல பகுதிகளில் இன்னும் மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை. அதனால் இருளில் தவிக்கும் அவர்களால் சமையல் செய்து சாப்பிடுகிற நிலை இல்லை. இதை அறிந்த பால் முகவர்கள் 1000 லிட்டர் பாலை சூடு செய்து பொது மக்களுக்கு இன்று வழங்கினார்கள்.
6000 பேருக்கு விநியோகம்
மாநில தலைவர் பொன்னுசாமி தலைமையில் முகவர்கள் அமைந்தரையிலும், ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா அருகிலும், சூளைமேடு மற்றும் டெய்லர்ஸ் ரோட்டிலும் சூடான பாலை இலவசமாக வழங்கினார்கள். பாலில் சர்க்கரை கலந்து வெள்ளம் பாதித்த மக்களுக்கு வினியோகம் செய்தனர். பாத்திரங்களிலும், டம்ளர், சொம்புகளிலும் 6ஆயிரம் பேர்வரை வாங்கிச் சென்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூடான பாலை வார்த்துள்ளனர் முகவர்கள் .