For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை மழை: சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தம்பதி பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் பணி முடிந்து, வீடு திரும்பிய பெண் அதிகாரி மழையால் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் பலியானார். இச்சம்பவம் சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த தம்பதியினரின் பெயர் கோவிந்தன், 62; நளினி, 53; என்பதாகும். இவர்கள் சென்னை முகப்பேர் மேற்கு, முதல் தெருவில் வசித்து வந்தனர். கோவிந்தன் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். நளினிபெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (லோகோ) கிளர்க்காக வேலை செய்து வந்தார்.

Chennai Rain: Couple steps on snapped cable, dies

இந்நிலையில், 3 நாட்களுக்கு முன் தேர்தல் பணிக்காக நளினி திருத்தணி சென்றார். அங்கு ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். பணியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு திருத்தணியில் இருந்து பஸ்சில் புறப்பட்டு நள்ளிரவு கோயம்பேடு வந்தார். இரவு 2 மணி அளவில் நளினி, தனது கணவர் கோவிந்தனுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இடியுடன் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் தண்ணீர் குளம்போல தேங்கியிருந்தது. இந்த நீருக்குள் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்துள்ளன. மேற்கு முகப்பேர் பகுதியின் வீட்டு அருகே முதல் பிளாக் முதல் தெருவிற்குள் தம்பதியினர் வரும் போது, அறுந்து கிடந்த உயரழுத்த மின் கம்பியை எதிர்பாராதவிதமாக நளினி மிதித்துவிட்டார். மின்சாரம் பாய்ந்ததில் அவர் உடல் துடித்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தன், நளினியின் கையைப்பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றார். ஆனால், கோவிந்தன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரின் மரண ஓலத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உடல் கருகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் நொளம்பூர் போலீசார், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர். அதன்பிறகு சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தம்பதியினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட இருவரது உடலும், மூன்று மணி நேரம், சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தாமல் இருந்தது. மின் கம்பி அறுந்து விழுந்தது குறித்து, ஏற்கனவே புகார் அளித்திருந்தோம். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால்,இருவரும் உயிரிழக்க நேர்ந்திருக்காது என்று அந்த பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து பலியான தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் ரமேஷ் திருமணமாகி பூனாவில் வசித்து வருகிறார். மகள் சரஸ்வதி திருமணமாகி திருவேற்காடு அயனம்பாக்கத்தில் வசிக்கிறார். மின்சாரம் பாய்ந்து ஒரே நேரத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A 65year old man named Govindan and his 53year old wife Nalini were killed when they stepped on a pool of stagnant water, unaware that the overhead power supply cable that had snapped was lying underneath. The incident occurred, at Mogappair in Chennai on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X