காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறியது... மழை குறைய வாய்ப்பு- வானிலை
வடகிழக்கு பருவமழை தொடங்கி வேகத்தில் சற்றே திசைமாறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்க கடலில் விலகி செல்வதால் மழை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்க கடலில் விலகி செல்வதால், 6ம் தேதிக்கு பிறகு மழை குறைந்த நிலை காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பலத்த மழை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் உள்ள தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர், வடகரை, குண்டாறு உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
தென் மாவட்டங்களில் மழை
நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும், தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த 2 நாட்களாக வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழத் தொடங்கியது.
நீர் மட்டம் உயர்வு
இதன் காரணமாக கண்ணுப்புளி மெட்டு குண்டாறு நீர்தேக்கம், மேக்கரை அடவி நயினார் கோவில் நீர்தேக்கம், கடையநல்லூர் கருப்பாநதி நீர்தேக்கம் உள்ளிட்ட நீர்தேக்கங்களுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. மேலும் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் தங்களது சாகுபடி பணிகளை தொடங்க தயாராகி வருகின்றனர்.
திசை மாறிய தாழ்வு மண்டலம்
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 250 கி.மீ, தூரத்தில் நிலை கொண்டுள்ளது. 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று திசைமாறி வடகிழக்கு திசை நோக்கி செல்லும் என்றார்.
மழை குறைய வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மத்திய மேற்கு வங்க கடலில் இருந்து விலகி செல்லும் நிலையில் 6ம் தேதிக்கு பிறகு மழை குறைந்த நிலையே காணப்படும் என்றார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரம், காங்கேயத்தில் 7 செ.மீ மழை பெய்துள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
காற்றின் தாக்கம் குறைவு
சென்னையை நோக்கி நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது மேல் நோக்கி நகர்வதால் அடுத்த சில நாட்களுக்கு வட தமிழகத்தில் கடற் காற்றின் தாக்கம் குறைவாகவே இருக்கும். சென்னை நகரம் அமைந்துள்ள அட்சரேகையின் வடக்கே மையம் கொண்டுள்ள ஒரு காற்று வெளியானது தரை காற்றை மட்டுமே வலுப்படுத்தும். எனவே, சென்னையைப் பொறுத்தவரை அடுத்த சில நாட்களுக்கு வானம் தெளிவாகவே இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். அதுகூட பெய்யாமல் இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.