சென்னை மக்களைத் துள்ள வைத்த ஜில் மழை.. ஹேஷ்டேக் போட்டு கொண்டாடும் நெட்டிசன்கள்!
சென்னை: மழை... சென்னை மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாத ஒரு சொல், மறக்கக் கூடாத சொல்லும் கூட.
கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் புறநகர் மட்டுமின்றி சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. வீடுகளை இழந்த மக்கள் பலர் அகதிகளாக திருமண மண்டபங்கள், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
எதிர்பார்க்காத அளவு வெள்ளம் திடீரென சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உயிரிழந்தவர்கள் ஏராளம்.
இப்படியாக சுனாமியை விட மோசமாக சுழன்றடித்த மழையின் பாதிப்புகளில் இருந்து மக்கள் முழுவதும் மீண்டு விட்டார்களா என்பது இன்னும் கூட சந்தேகமே.
மழைக்காக தவம்...
ஆனால், காலத்தின் கொடுமை மீண்டும் வெயிலுக்கு இதமாக மழைக்கு தவமிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் சென்னை மக்களுக்கு. கத்தரி வெயிலின் தாக்கத்தில் சென்னை மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், கடந்தவாரங்களில் தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்தது. இதனால் வெறும் மேகமூட்டம் தானா என்ற ஏக்கத்தில் சென்னை மக்கள் இருந்தனர்.
அடடா மழைடா...
இந்த சூழ்நிலையில் தான் நேற்று முதல் சென்னையிலும் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. கடந்தகால கசப்பான நினைவுகளை தள்ளி வைத்து விட்டு, இந்த கோடை மழையை ரசித்து வருகின்றனர் மக்கள்.
ட்ரெண்டிங்...
அதன் ஒருபாகமாக சென்னையில் மழை என்பது டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. வெறும் சந்தோஷமாக மட்டும் இல்லாமல், இன்னும் பழைய நிலைமை மாறவில்லை, ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது என்பதையும் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஞாபகம் வருதே...
இதேபோல், வெயிலுக்கு இதமாக இந்த மழை சந்தோஷத்தை தந்தாலும், கடந்தாண்டு வெள்ளப் பாதிப்பை மீண்டும் நினைவூட்டுவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
துளி துளியாய்... கொட்டும் மழைத் துளியாய்....
எது எப்படியோ எப்போதும் போல மழை கொண்டாடப்பட வேண்டிய ஒன்று தான் என தங்கள் பகுதியில் மழை பெய்வது, கருமேகங்கள் திரள்வது என விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு டிவிட்டரில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.