சென்னையில் வெள்ளம்...மின் இணைப்பு துண்டிப்பு - தண்ணீர் வடிந்த பின்பே வெளிச்சம்
சென்னையில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பல மணிநேரம் கொட்டிய பலத்த மழை காரணமாக பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பின்னரே மின் இணைப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
வியாழக்கிழமையன்று பிற்பகல் கொட்டிய மழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தி.நகர், வேளச்சேரி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகரில் மடிப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
பல இடங்களில் மின்சார பெட்டிகள் நீரில் மூழ்கியுள்ளன. மின்கசிவினால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழையை அடுத்து சென்னையில் 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தகவல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நடடிவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின் இணைப்பு பாதுகாப்பு கருதி துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார். வெள்ளத்தினால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பு கருதியே பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
#ChennaiRains
— Ganesh Balaji (@ganeshvijay2000) November 3, 2017
Stay safe people#madipakkam. Flooded in
madipakkam and nearby regions pic.twitter.com/Ghs7PKRzQb
வெள்ள நீர் வடிந்து வரும் பகுதிகளில் மின் இணைப்பு அளிக்கப்படுவதாகவும், வெள்ளம் முற்றிலும் வடிந்த பின்னரே மின் இணைப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.