சென்னையை உலுக்கிய வெள்ளம்... 50,000 பேர் வேலையிழந்த பரிதாபம்!
சென்னை: சென்னையில் பெய்த பெரும் மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மிகப் பெரிய வரலாறு காணாத வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் இப்போதுதான் ஒவ்வொன்றாக விரிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. கிட்டத்தட்ட 50,000 தொழிலாளர்கள் இந்த வெள்ளம் காரணமாக வேலையை இழந்துள்ளனராம்.
சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், வீடுகள் மட்டுமல்லாமல் பல தொழில் நிறுவனங்களுக்கும், இந்த வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனவாம். அதில் 95 சதவீத நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாகும்.
50000 ஊழியர்கள்...
இந்த நிறுவனங்களில் பணியாற்றி வந்த 50,000 பேருக்கு தற்போது வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.
நஷ்ட மதிப்பீடு...
வெள்ளத்தால் ஏற்பட்ட தொழில் பாதிப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், விரைவில் நஷ்ட மதிப்பீடு தயாராகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை...
நிதியமைச்சருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
நேரில் ஆய்வு...
முன்னதாக சமீபத்தில் சென்னை வந்திருந்த மிஸ்ரா, தொழில் நிறுவனங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.