தமிழகத்தில் இயல்பை விட 6 சதவிகித மழை குறைந்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video
சென்னை : தமிழகத்தில் வழக்கமாக பெய்யும் வடகிழக்குப் பருவமழையின் அளவு இந்த ஆண்டு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
கடந்த பத்து நாட்களாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, நாகை உட்பட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது. இதுகுறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது இன்னும் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார். மேலும், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.
இயல்பாக தமிழகத்திற்கு வடகிழக்குப் பருவமழையின் சராசரி என்பது 26 செ.மீ ஆனால், இந்த ஆண்டு 24 செ.மீ., தான் மழை பதிவாகி உள்ளது. அதே நேரத்தில், சென்னைக்கு வழக்கத்துக்கு மாறாக இயல்பை விட 70 சதவிகிதம் மழை அதிகமாகப் பதிவாகி உள்ளது.
வழக்கமாக சென்னையின் வடகிழக்குப் பருவமழையின் அளவு 40 செ.மீ., ஆனால் இந்த முறை 68 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அதுபோல நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.