தமிழகம், புதுச்சேரியில் மழை : நல்ல சேதி சொன்ன வானிலை மையம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை காலத்தின் உச்சமான 'அக்னி நட்சத்திரம்' தொடங்கி வெயில் வறுத்தெடுத்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் குறைந்து தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதே போன்று புதுச்சேரியிலும் வெப்பம் தணிந்து லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை நிலவரம்
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக சென்னையில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் அடுத்த இரண்டு நாட்கள் வெப்பம் சற்று குறைந்து சென்னை மக்களின் இன்னல் தீர்க்கும் என்று தெரிவத்துள்ளது.
திருத்தணியை விடாத வெயில்
கோடை தொடங்கியது முதலே மண்டைய பிளக்கும் வெயில் இன்றும் திருத்தணியில் பிச்சு வாங்குது. இன்று அதிகபட்சமாக திருத்தணியில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக வெயில் நகரம் வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட், பரங்கிப்பேட்டை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிந்துள்ளது.
கோடைமழை
வெப்ப சலனத்தால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும், உள்மாவட்டங்களில் சூறை காற்றுடன், பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
கிட்டுமா மழை
வறட்சி காரணமாக நீர்நிலைகள் வறண்டு கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலையில் மாற்றம் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது மக்களுக்கு சற்று ஆhgறுதல் அளிக்கும் விஷயம் தான். ஆனால் கோடை மழையை மற்ற மாவட்டங்கள் அனுபவித்து விட்ட நிலையில் தொடர்ந்து சதம் கண்டு வரும் சென்னை, திருத்தணிக்கு இந்த முறை மழை இருக்குமா என்பதே அனல் காற்றால் அவதியுறும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.