பெரும் வெள்ளத்தில் சென்னைவாசிகளுக்கு கைகொடுத்தது மெட்ரோ ரயில்தான்.....
சென்னை: கனமழை வெள்ளத்தால் ரயில், சாலை போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டு சென்னை மாநகரமே தனித் தனி தீவுகளாக வெட்டிவிடப்பட நிலையில் சென்னைவாசிகளுக்கு பலவகையிலும் கொடுத்தது மெட்ரோ ரயில்தான்.
சென்னையில் மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட போது கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டனர் பொதுமக்கள். ஆனால் கடந்த வாரம் சென்னையை மூழ்கடித்த பெருமழை வெள்ளத்தால் சாலைப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டது.
சென்னை புறநகர் ரயில் சேவையும் வெளியூர்களுக்கான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. அந்த நாட்களில் சென்னை மாநகர மக்களுக்கு கை கொடுத்தது மெட்ரோ ரயில்தான். சில ஆயிரம் பேர்தான் பயணித்துக் கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் கடந்த வாரம் வெள்ள பாதிப்பின் போது சராசரியாக நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேர் வரையும் பயணித்திருக்கிறார்கள்.
மெட்ரோ ரயில்தான் சென்னைவாசிகளுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்த ஒரே போக்குவரத்தாக இயங்கியது. அதிலும் சிலர் சென்னை வெள்ளத்தை வேடிக்கை பார்க்கவும் மெட்ரோ ரயிலில் பயணித்தனர்..
ஆனால் பலரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக விமானத்தை பிடிக்க, ரயில் நிலையங்களுக்கு செல்ல போராடியவர்களே...
காப்பாற்றிய மெட்ரோ சுரங்க பாதை...
அத்துடன் சென்னை சைதாப்பேட்டை அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதைதான் பெரும்பகுதி வெள்ளத்தை உள்வாங்கியது. இதன் பின்னரே அது நந்தனம் மற்றும் தி.நகருக்குள் ஊடுருவியது.
இந்த மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை மட்டும் இல்லாமல் இருந்தால் தி.நகரும், நந்தனமும் பெரும் பேரழிவையே சந்தித்திருக்கும்.
நல்லவேளை கருணாநிதி கொண்டுவந்த மெட்ரோ ரயில் திட்டம் என்பதற்காக இதை மூடிவிட்டு மோனோ ரயிலை கொண்டுவருகிறேன் என அடாவடி காட்டாமல் விட்டது அ.தி.மு.க. அரசு. அப்படி புதிய தலைமைச் செயலகம் போல, அண்ணா நூலகம் போல இந்த மெட்ரோ ரயிலையும் ஆளும் அ.தி.மு.க. அரசு மூடியிருந்தால் சென்னைவாசிகளின் நிலையை நினைத்துபார்க்கவே முடியாது.. சென்னை சைதாப்பேட்டையும் தி.நகரும் நந்தனமும் சென்னை வெள்ளத்தின் எச்சமாக நினைவுகளை மட்டுமே தாங்கிய இன்னொரு தனுஷ்கோடியாகியிருக்கும்....