சென்னை நீர்த்தேக்கங்களில் வெறும் 25 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர்.. பெரும் பஞ்சம் ஏற்படும் ஆபத்து!
சென்னைக்கு தண்ணீர் வழங்கும் 4 ஏரிகளில் இன்னும் 25 நாளைக்கு போதுமான தண்ணீர் மட்டுமே உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீர் இன்னும் 25 நாட்களுக்கு மட்டுமே வரும் என்பதால் பொதுப்பணித்துறை ஆந்திர அரசிடம் தமிழகத்துக்கான தண்ணீரை தருமாறு கேட்டுள்ளது.
சென்னை மாநகருக்கு பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் இருந்துதான் தண்ணீர் விநியோக்கிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை வடகிழக்குப் பருவமழை முறையாக பெய்யாததால் ஏரிகள் தண்ணீர் வரத்து இன்றி காயத்தொடங்கியுள்ளன.
தற்போது ஏரிகளில் மிகக்குறைந்தளவு தண்ணீரே உள்ளது. 4 ஏரிகளிலும் உள்ள ஒட்டு மொத்த தண்ணீரை சேர்த்தாலும் இன்னும் 25 நாட்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வரும்
இதனால் சென்னை மாநகர் பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு பெய்த அளவுக்கு அதிகாமான மழையால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது.
போன வருஷம் நீரில் மிதந்தோம்
வீடுகளில் முதல் தளம் வரை வந்த வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போனது. இதனால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது.
இந்த வருடம் வறட்சியில் மிதக்கிறோம்
ஆனால் இந்த ஆண்டு சென்னையில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போய் பனிபெய்யத் தொடங்கிவிட்டது. சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை 7 சென்டி மீட்டர் மட்டுமே பெய்துள்ளது.
மழை வராவிட்டால் கஷ்டம்
இதனால் நீர்த்தேக்கங்கள் மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டமும் குறையத் தொடங்கியுள்ளது. இனியும் வட கிழக்குப் பருவமழை பெய்யாவிட்டால் சென்னை மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் இந்த ஆண்டு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
25 நாட்களுக்கே வரும்
சென்னையில் ஒரு நாளைக்கு 830 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் ஏரிகளில் தற்போது உள்ள தண்ணீர் இன்னும் 25 நாட்களுக்கு மட்டுமே வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆந்திர அரசு தமிழகத்துக்கு கிருஷ்ணாநதியிலிருந்து 4 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திராவின் திருட்டுத்தனம்
அதேநேரத்தில் திறந்துவிடப்படும் தண்ணீரை வழியில் உள்ள விவசாயிகள பம்புசெட்டுகள் மூலம் உறிஞ்சாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.