சென்னை: டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் கொல்கத்தாவில் கைது
சென்னை: சென்னை அண்ணா நகரில் டாக்டர் வீட்டில் 119 சவரன் நகைகள், ரூ.4 லட்சத்தையும் கொள்ளையடித்த வேலைக்காரி அகில்மா பீவியின் கணவர் இம்ரான் மற்றும் அவரது நண்பர் ஜாபீர் ஆகியோர் நேற்று கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணாநகர் கிழக்கு கியூ பிளாக் 15வது தெருவை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்தன் (61). அமைந்தகரையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் இதய சிகிச்சை நிபுணராக உள்ளார்.
கடந்த 4ஆம் தேதி மாலை இவரது மனைவி சாந்தி (47), தாயார் ஆண்டாள் (87) மற்றும் வீட்டு வேலைக்காரி மீனா (30) ஆகியோரை துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 119 சவரன் நகை, ரூ.4 லட்சம் ஆகியவற்றை 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.
முதல் கட்டமாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டு வேலைக்காரியான கொல்கத்தாவை சேர்ந்த மீனா என்ற அகில்மா பீவி (39) என்பவர் தனது கணவர் இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளையை நடத்தியிருப்பது தெரிந்தது.
இதைதொடர்ந்து, அகில்மாபீவி கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரும் கொல்கத்தா தப்பி சென்று விட்டனர்.
சிக்கிய வேலைக்காரி
அண்ணா நகரில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட வேலைக்காரி, கொள்ளைச் சம்பவத்தை போலீஸாரிடம் நடித்துக் காட்டியபோது சிக்கிக் கொண்ட விவரம் தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மருத்துவர் ஆனந்தனிடம் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த நோயாளி மூலம் அறிமுகமாகியுள்ளார் அகில்மா பீவி என்ற மீனா, ஆனந்தன் குடும்பத்தினரிடம், தான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றே கூறியுள்ளார். மேலும், அவர் எப்பேதும் காலில் மெட்டியுடனும் நெற்றியில் திலகத்துடனும் இருந்துள்ளார்.
கொள்ளை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆனந்தன் வீட்டுக்கு விசாரிக்கச் சென்றபோது, மீனா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்தபோது அவர் முஸ்லிம் என தெரிய வந்தது.
போலீசுக்கு சந்தேகம்
இதனால் கொள்ளைக்கும், அவருக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து, கொள்ளைச் சம்பவம் எப்படி நடைபெற்றது என போலீஸார் மீனாவிடம் கேட்டனர். அப்போது சம்பவம் நடைபெற்றது எப்படி என விவரித்தார். அதையே நடித்துக் காட்டும்படி போலீஸார் கேட்டனர். ஆனால் அவர் ஏற்கெனவே சொன்னதற்கு மாறாக வேறு வகையில் மீனா நடித்துக் காட்டினாராம். இதனால் அவர் மீதான சந்தேகம் உறுதியானது. இதையடுத்து, அவர் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து, அதில் அன்றைய தினம் யாருக்கெல்லாம் போன் செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை போலீஸார் எடுத்தனர்.
கணவருக்கு தொடர்பு
அப்போது அவர், கணவர் இம்ரான் எண்ணில் சுமார் அரைமணி நேரம் கடைசியாகப் பேசியிருந்தாராம். அது குறித்து கேட்டபோது கணவர் இம்ரான் கொல்கத்தாவில் இருப்பதால் வீட்டு விஷயங்கள் குறித்துப் பேசியதாக தெரிவித்தாராம். உடனே இம்ரான் செல்போன் எண்ணை போலீஸார் தொடர்பு கொள்ள முயற்சித்தனர், அப்போது அந்த செல்போன் எண் சென்னை அரும்பாக்கத்தில் இருப்பதாக சிக்னல் காட்டியதாம்.
இதன்பிறகே, மீனாவை குற்றவாளி என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து, கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.
கொல்கத்தாவில் கைது
அவர்களின் புகைப்படம் ஆனந்தன் வீட்டு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு 2 தனிப்படையினர் கொல்கத்தாவுக்கு சென்றனர். அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படையினர், நேற்று இரவு அகில்மா பீவியின் கணவர் இம்ரான் மற்றும் அவரது நண்பர் ஜாபீர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சென்னை கொண்டுவரப்படலாம் என்று கூறப்படுகிறது.