'பங்க் குமார் முதல் 'பர்த் டே' பினு வரை...!' மயிலை சிவாவின் மெர்சல் ஆட்டம்!! பகுதி- 2
Recommended Video
-மெட்ராஸ்காரன்
தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் உள்ளனர். அதில், தலைநகர் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் நெல்லையும் மூன்றாவது இடத்தில் மதுரையும் கடைசி வரிசையில் நீலகிரியும் இருக்கிறது' என மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்போது டி.ஜி.பியாக இருந்த ராமானுஜம் தாக்கல் செய்த தகவல் இது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தாக்கல் செய்த இந்தத் தகவலுக்கும் தற்போதுள்ள நிலவரத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. அவர் அளித்த பட்டியலில், ' மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 16 ஆயிரத்து 502 ரவுடிகளின் பெயர்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டுவருகிறது. சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் உள்ளனர். நெல்லை நகர்ப்புறத்தில் 334 ரவுடிகளும் நெல்லை புறநகர் பகுதிகளில் 1,214 ரவுடிகளும் மதுரை மாவட்டத்தில் 888 ரவுடிகளும் மதுரை புறநகரில் 484 ரவுடிகளும் கன்னியாகுமரியில் 748 ரவுடிகளும் இருக்கின்றனர்' என விரிவான பட்டியலையும் கொடுத்திருந்தார்.
இந்தப் பட்டியலில் 16 ஆயிரம் பேர் இருந்தாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், 'யார் தல?' என்பதில் காலம்காலமாக போட்டி நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்காக, ரத்த ஆறுகளை டி.எம்.சி கணக்கில் தெறிக்கவிட்ட ரவுடிகளும் உண்டு. அந்தவரிசையில் பிரதான இடத்தில் இருப்பவர் மயிலாப்பூர் சிவக்குமார்.
மயிலை இரட்டை கொலை
2011-ம் ஆண்டு பிப்வரி மாதம் 10-ம் தேதி. மயிலாப்பூர், சிலேட்டர்புரம் பகுதி. நள்ளிரவில் 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் இரண்டு பேரைக் குறிவைத்துக் களமிறங்கியது. வீட்டின் ஓடுகளைப் பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்து, பில்லா சுரேஷையும் விஜயகுமாரையும் சராமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு சாவகாசமாக அந்த இடத்தைவிட்டு அகன்றது. இதில், பில்லா சுரேஷ் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இந்தக் கொலைக்கான மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவர் என போலீஸாரால் சொல்லப்பட்டவர் நிர்மல். அவரது சொந்த அக்கா மகன்தான் விஜயகுமார்.
திண்டுக்கல் பாண்டி கூட்டாளி மகேஷ்
சம்பவம் செய்தால் பணம் கொட்டும்' என்பதற்காக ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டே வீழ்ந்து போன 'ஐஸ் ஹவுஸ் குண்டு திருநா' போல் இல்லாமல், உள்ளூரிலேயே செல்வாக்கை வளர்த்துக் கொண்ட பிரதானமான ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார். ' காதல் விவகாரம் ஒன்றில் தலையிட்டதைத் தாங்க முடியாமல்தான் பில்லா சுரேஷை மட்டையாக்கினார்கள்' என்ற தகவல் பரவ, 'அரசியல்வாதிகள் சிலரது தூண்டுதலால்தான் இந்தப் படுகொலைகள் நடந்தன என்ற பேச்சும் அப்போது அடிபட்டது. திண்டுக்கல் பாண்டியின் பிரதான கூட்டாளியாக இருந்த மகேஷ் என்கிற பெரிய மகேஷைப் போட்டதில் இருந்து சிவக்குமாரின் புகழ் பரவத் தொடங்குகிறது. 1993ம் ஆண்டு ராயப்பேட்டையில் நடந்த ஒரு கொலை, 2001ம் ஆண்டு நடந்த சிவக்குமார் கொலை, சூணாம்பேட்டில் நடந்த ராட்டினம் குமார் கொலை, திருவேற்காட்டில் நடந்த வெடிகுண்டு சம்பவம் என 23 வழக்குகளுக்குச் சொந்தக்காரராகவும் மூன்று முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட பெருமைக்குரியவராகவும் இருந்த மயிலாப்பூர் மகேஷை, காஞ்சிபுரத்தில் வைத்துக் கொன்றார் சிவக்குமார். இதன்பிறகு மயிலாப்பூர் ரவுடிகள் வட்டாரத்தில் சிவக்குமாரைத் தவிர வேறு யார் பெயரையும் எழுத முடியாத அளவுக்கு மாறிப் போய்விட்டது.
பினுவுடன் மயிலை சிவா
நிர்மல் கும்பலுக்கும் பெரிய மகேஷ் கும்பலுக்கும் இருந்த கட்டப் பஞ்சாயத்து தகராறுதான், நீயா நானா...பிரச்னையாக வளர்ந்தது என்றாலும், ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் எதற்கு என்ற கேள்விதான் மகேஷை மரணப் பாதைக்குக் கொண்டு சென்றது. தேனாம்பேட்டை சிடி மணியின் அரசியல் பாணிக்கும் சிவக்குமாரின் கிரிமினல் பாதைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆடி கார், அரசியல்வாதிகளின் நட்பு, காவல்துறையின் தொடர்புகள் என இருவரையுமே சம அந்தஸ்தில் வைத்துப் பார்க்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். போதைக் கடத்தல் மன்னன் பினுவோடு சிவக்குமாருக்கும் பழக்கம் உண்டு. பிறந்தநாள் பார்ட்டியில் இவரும் கலந்து கொள்வதாகத்தான் இருந்தது. கடைசிநேரத்தில் வந்த எச்சரிக்கை மணி, சிவக்குமாரையும் மணியையும் தப்பவைத்துவிட்டது.
அரசியல்வாதிகள் அனுமதியுடன்
அரசியல்வாதிகளின் செல்லப் பிள்ளையாகவும் ரியல் எஸ்டேட், வீட்டைக் காலி செய்வது; கடைகளைக் காலி செய்வது எனக் கட்டப் பஞ்சாயத்துகளில் சிவா ரொம்பவே பிஸி. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் என எந்தப் பகுதிக்குள் கால் வைக்க நினைத்தாலும் அந்தந்த பகுதிகளில் செல்வாக்காக வலம் வரும் அரசியல் புள்ளிகளுக்கு சிவக்குமார் தரப்பில் இருந்து அழைப்பு போகும். ' அண்ணே...உங்க ஏரியாவுல முக்கிய வேலை ஒன்னு வந்திருக்கு. உங்களை சந்திச்சுப் பேசனும்' என்பார்கள். எதிர்முனையில் போனை எடுப்பவர்களும், ' நம்மைக் கேட்டுத்தான் நம்ம ஏரியாவுக்குள்ளயே கால் வைக்கறான். தாராளமாக வந்து போகட்டும்' என சிவக்குமாருக்கு இடம் அளிப்பார்கள். பஞ்சாயத்து முடிந்த பிறகு, அதில் சம்பந்தப்படாத லோக்கல் புள்ளிக்கும் உரிய பங்கு சென்று சேர்ந்துவிடும். இந்த அணுகுமுறைதான் அரசியல் கடந்து ஏராளமான நட்புகளை சிவாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
எகிறிய சொத்து மதிப்பு
காவல்துறையில் இருந்து வரும் நிலப் பஞ்சாயத்து, பெரிய இடத்து வில்லங்கம் போன்றவற்றையும் எந்தச் சுவடும் இல்லாமல் முடித்துக் கொடுத்துவிடுவார். இதன் காரணமாகவே சிவாவைத் தேடி வரும் காவல்துறையினரும் அதிகம். இதன் காரணமாக கடந்த சில வருடங்களில் சிவாவுன் சொத்து மதிப்பும் தாறுமாறாக எகிறிக் கொண்டிருக்கிறது.
அஞ்சும் தொழில்துறை எதிராளிகள்
எதிராளி என முடிவு செய்துவிட்டால், கொலை செய்யும் முடிவோடுதான் கத்திகளைக் கையில் எடுக்கிறார்கள் ரவுடிகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டுப்பட்டு உயிர்பிழைக்கும் வாய்ப்பைக்கூட எதிராளிகளுக்கு இவர்கள் கொடுப்பதில்லை. அரசியல் அசைன்மெண்டுகளுக்குப் பெயர் போன மயிலாப்பூர் சிவக்குமாரின் கிரைம் ரிக்கார்டுகளால் சற்று ஒதுங்கியிருக்கிறார்கள் அவருடைய தொழில்முறை எதிராளிகள்.
சின்ன சிவா
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நில ஆக்ரமிப்புப் புகார்களில் தொடர்ந்து அடிபட்டு வரும் ஆன்மிகத் தலைவர் ஒருவரின் அமைப்பு, சென்னையில் பிணங்களை எரிக்கும் முக்கிய வேலைகளை எடுத்துச் செய்து வருகிறது. இந்தப் பணியை வேலு என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறது. இதனால் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பங்கு சிவக்குமாருக்குச செல்கிறது. இதில், தன்னை சின்ன சிவாவாக அறிமுகப்படுத்திக் கொண்டு வலம் வருகிறார் வேலு. இதன்மூலம் ஆன்மிக வட்டாரத்துத் தொடர்புகளையும் அதிகப்படுத்தியிருக்கிறார் சிவா. அவர்கள் மூலமாக அரசியல் புள்ளிகள் சிலரின் அருகாமையும் சிவக்குமாருக்குக் கிடைத்திருக்கிறது. இதன் பலனாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களோடு வலம் வருகிறார் சிவக்குமார்.