ஒயின்ஷாப் பார் டூ ஒன்பது கொலைகள்! அசராத 'அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன்'- பகுதி 5
Recommended Video
-மெட்ராஸ்காரன்
தலைநகர் சென்னையில் மட்டும் 928 ரவுடிகள் உள்ளனர். ஏ பிளஸ், ஏ, பி, சி எனத் தரம்வாரியாகப் பிரித்து வைத்துள்ளனர் ரவுடி ஒழிப்பு போலீஸார். இந்தப் பட்டியலில், ஏ பிளஸ் பிரிவில் 45 பேரும் ஏ பிரிவில் 140 பேரும் பி பிரிவில் 225 பேரும் மற்றவர்கள் சி பிரிவிலும் அடங்குகின்றனர்.
ஏ பிளஸ் என்றால் தாதா வகையினரும் மற்றவர்கள் சிறிய மற்றும் நடுத்தர வகையிலான குற்றங்களிலும் ஈடுபடுகிறவர்கள். இவர்களில் 250 பேர் பல்வேறு சிறைகளில் அடைபட்டுள்ளனர். 678 பேர் தலைமறைவாக உள்ளனர்' - சென்னை மாநகர போலீஸார் வெளியிட்டுள்ள கணக்கு இது.
ஒன்பது கொலை ராதா
ஒயின் ஷாப் பார் வருமானம் மூலம் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன், ஒன்பது கொலைகளுக்குச் சொந்தக்காரராகிப் போனது காலத்தின் விளையாட்டு. இன்று தலைநகரில் எத்தனை டாஸ்மாக் பார்கள், ராதாகிருஷ்ணனின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது என்ற கணக்கை யாராலும் சொல்ல இயலாது. அந்தளவுக்கு அரசியல்வாதிகள் பிளஸ் போலீஸ் அதிகாரிகளின் ஆசியோடு வலம் வருகிறார். பெருத்த வருமானம் பார்த்து வரும் ஏ பிளஸ் ரவுடிகள் மத்தியில் ராதாகிருஷ்ணனுக்குத் தனி மரியாதை உண்டு.
மலையம்பாக்கம் பினு பார்ட்டி
'மலையம்பாக்கத்தில் பினு நடத்திய பர்த் டே கொண்டாட்டத்தின் பின்புலமே, ராதாகிருஷ்ணனைப் போட்டுத் தள்ளுவதுதான்' என்கின்றனர் தொழில்முறை ரவுடிகள். சைதாப்பேட்டையில் வேளச்சேரி தி.மு.க புள்ளி ஒருவர் மீது வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் சி.டி.மணியின் பின்புலத்தை காவல்துறை அறியும். இந்த சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே ராதாகிருஷ்ணன்தான். அந்தளவுக்கு மணியும் ராதாவும் இணைந்த கைகளாக செயல்பட்டு வந்தனர். பஞ்சாயத்து ஒன்றில் ஏற்பட்ட சிறு தகராறு அவர்களுக்குள் விரிசலை ஏற்படுத்திவிட்டது. அதன் விளைவாக, 'யார் முதலில் முந்துவது?' என்ற அளவுக்குப் பழிதீர்க்கும் முடிவோடு சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
போலீஸ் அதிகாரிகளுடன் கூட்டு
கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பினு பிறந்து வளர்ந்தது எல்லாம் சூளைமேடு பகுதிகளைச் சுற்றித்தான். ரவுடிகளுக்குள் ஏற்பட்டுள்ள தகராறுக்கு முக்கியக் காரணமே, சில காவல்துறை அதிகாரிகள்தான். ' மாதம்தோறும் யார் அதிக மாமூலைத் தருவார்கள்?' என்ற யுத்தம்தான், வேறு வடிவில் வெடித்துக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக் பார்களின் வருமானம் தவிர, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், ரியஸ் எஸ்டேட் பஞ்சாயத்துகள் ஆகியவற்றின் மூலம் ராதாகிருஷ்ணன் வசூலித்துத் தரும் பணத்தின் காரணமாக, சில அதிகாரிகள் அவர் பக்கம் விசுவாசமாக இருக்கின்றனர். அவரது ஏரியாவில் முன்பிருந்த பல அதிகாரிகள், பதவியில் இருக்கும் வரையில் பல கோடிகளைப் பார்க்காமல் நகர்ந்ததில்லை.
போட்டுக் கொடுத்த போலீஸ்
ராதா மீதான பாசம் காரணமாக, மணியின் செல்போன் அழைப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதை மணி தரப்பினர் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டனர். ' ராதாகிருஷ்ணனைப் போட்டுத் தள்ளிவிட்டால், காவல்துறை வட்டாரத்திலும் நம்மை மிஞ்ச ஆள் இருக்காது' என்பதுதான் பர்த் டே பார்ட்டின் முக்கிய அஜெண்டா. இதை மோப்பம் பிடித்த சில அதிகாரிகள், ராதாகிருஷ்ணனுக்குத் தகவலைத் தெரிவித்துள்ளனர். இதன் நீட்சியாக பர்த் டே ஆட்டத்தைக் கலைக்க ஸ்பெஷல் போலீஸ் டீம் களமிறங்கியது. மணியின் செல்போன் பேச்சுக்கள் சிக்காமல் இருந்திருந்தால், ராதாகிருஷ்ணனுக்கு வைத்த குறி தப்பியிருக்காது என்கின்றனர் ரவுடிகள் சிலர்.
வியாசர்பாடி நாகேந்திரன்
வடசென்னையின் முக்கிய தாதாக்களில் ஒருவரான வியாசர்பாடி நகேந்திரன், தற்போது சிறையில் இருக்கிறார். இவருக்கு வலதுகரமாகச் செயல்பட்டு வருகிறார் ராதாகிருஷ்ணன். எந்த ஒரு சம்பவமாக இருந்தாலும் நேரடியாகக் களமிறங்குவதில் ராதாகிருஷ்ணன் கில்லாடி. இந்தத் துடிப்பின் காரணமாகத்தான் அரசியல் புள்ளிகள் அவரைத் தேடி வருகிறார்கள். அரும்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு, அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து மாதம் 30 லட்ச ரூபாய் மாமூலை வசூலித்துக் கொண்டிருக்கிறார். இதனை முடிவுக்குக் கொண்டு வரத்தான் சக ரவுடிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ' நான்கு ஏரியாக்களுக்கே இவ்வளவு மாமூல் என்றால், சென்னை காவல்துறைக்கு உள்பட்ட 139 காவல்நிலையங்களின் வசூலையும் ராதாகிருஷ்ணனே மேற்கொண்டால் நன்றாக இருக்கும். இதன் மூலம் மாதம் 70 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான மாமூலை எதிர்பார்க்கலாம்' என சில காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ' இதிலும், ராதாகிருஷ்ணன் கால் வைத்துவிட்டால், மற்றவர்கள் எல்லாம் வேறு வேலைகளைப் பார்க்க வேண்டியதுதான்' என ரவுடிகள் மத்தியில் பொருமல் அதிகரித்துவிட்டது. இந்த மோதலின் விளைவாகத்தான் ரவுடிகள் கொத்தாக அகப்பட்டனர்.
ஒரு ரவுடிக்கு 10 பேர்
ஒவ்வொரு ரவுடிகளும் தங்களுக்குத் துணையாக பத்து பேரைக் கையில் வைத்திருப்பார்கள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் எதிரிகளைக் கையாள்வதில் தனித்தனி திறமைகள் இருக்கும். இப்படிப்பட்ட படை இருந்தால்தான், வெளியில் மாமூல் பணமும் கொட்டும். ராதாகிருஷ்ணனிடமும் பத்து பேர் கொண்ட டீம் இருக்கிறது. இந்த டீமைக் கண்டாலே நடுங்குகின்றனர் வியாபாரிகள். துப்பாக்கிகள், ஆயுதங்கள், ஆடம்பர கார்கள் என எளிதில் எவரும் நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன்.