'அசால்ட் தாதா' அப்பச்சன் பினு- செம்மரக் கடத்தலை கற்று கொடுத்த அரசியல் வாரிசின் 'மாமனார்'! பகுதி- 6
Recommended Video
"நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரைப் பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும். நான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை. இந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு எனது பெயரை வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு எனது பெயரையே வைத்துவிட்டார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.
நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். கவுன்ட்டர் என்றால் 'திருப்பித்தாக்குதல்' என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸுக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார் என ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை'
- என உறுதியாகப் பேட்டியளித்த வெள்ளை ரவி, அடுத்த சில நாட்களில் பிணமாகத்தான் சென்னை வந்தார்.
வெள்ளை ரவிக்கு நேர்ந்த கதியை பினு மறக்கவில்லை. அதன் விளைவாகத்தான் அம்பத்தூர் காவல்நிலையத்தில் இன்று சரணடைந்திருக்கிறார்.
டீக்கடையே முகவரியாக
சென்னையில் கோலோச்சும் ஏ பிளஸ் ரவுடிகள் மத்தியில் 'அப்பச்சன்' பினு என்றுதான் அழைக்கப்படுகிறார். பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும், தமிழின் அத்தனை கெட்ட வார்த்தைகளும் பினுவுக்குப் பழக்கமாகிப் போனது. சூளைமேடு, கோயம்பேடு எனப் பல பகுதிகளில் வாழ்ந்திருந்தாலும் சூளைமேடு பகுதி, பினுவின் அடையாளமாக மாறிப் போனது. அங்குள்ள ஒரு வீட்டை, தனது இல்லமாகக் காட்டிக் கொள்கிறார். ஆனால், அவர் தங்கியதை யாரும் பார்த்ததில்ல்லை. சென்னையில் இருக்கும்போதெல்லாம் அந்த வீட்டின்கீழ் இருக்கும் ஒரு டீக்கடையின் முன்பு, அவரது கார் நிற்கும். காருக்குள் இருந்தபடியே தன்னை சந்திக்க வந்தவர்களைப் பற்றியும் தேடி வந்த போலீஸ் பற்றியும் அறிந்து கொள்கிறார்.
ராதாவை 'போட்டுத்தள்ள' ப்ளான்
கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவம் இது. மலையம்பாக்கத்தில் வைக்கப்பட்ட பர்த் டே கொண்டாட்டத்தில் பங்கேற்க தேனாம்பேட்டை சி.டி.மணியும் வருவதாக இருந்தது. மணிக்குப் போட்டியாக இருக்கும் ராதாகிருஷ்ணனை மட்டை ஆக்குவதுதான் பினுவின் நோக்கமாக இருந்தது. ஆளுக்கொரு திசையில் தொழில் செய்தாலும், ' பினுவோடு சேர்ந்து கொண்டால், வருமானம் அதிகமாகும். போலீஸும் கை வைக்காது' என மணிக்கு யோசனை கூறியிருக்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர். தொழிலில் மாறுதல்களைப் புகுத்த விரும்பிய மணியும், இந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்.
கடைசிநேரத்தில் தப்பிய பினு
கடைசி நேரத்தில் வந்த சிக்னல் காரணமாக, பர்த் டே பார்ட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் மணி. பினுவுக்கும் அதே தகவல் வந்து சேர, சம்பவ இடத்தில் இருந்து கிரேட் எஸ்கேப்.
போதை கடத்தல் பினு
வடசென்னையின் கடலோரப் பகுதிகளில் போதைக் கடத்தல் என்பது மிகச் சாதாரணம், ஹெராயின் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருளின் பெயர், ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட். இந்திய சந்தையில் சில ஆயிரங்களுக்குக் கிடைக்கும் இந்தப் பொடியின் சர்வதேச சந்தை மதிப்பு, லட்சத்தைத் தொடும். அதுவே, மலேசியாக போன்ற நாடுகளில் இன்னும் கூடுதல் விலை கிடைக்கும். இந்த மூலப்பொருளை ஏற்றுமதி செய்ததன் பயனாக, ஏராளமான ரவுடிகள் கோடீஸ்வரர்களாகியிருக்கிறார்கள். சில மார்வாடிகளின் முக்கியத் தொழிலாக இது இருப்பதால், அவர்களுக்குப் பக்கபலமாக சில ரவுடிகள் இருக்கிறார்கள். பினுவின் முக்கியத் தொழில்களில் இதுவும் ஒன்று. தொடக்கத்தில் சிறு சிறு அடிதடி வழக்குகளில் சிக்கி கைதானவர், ஒருகட்டத்தில் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனுடன் கூட்டு சேர்ந்தார்.
ராதாவுடன் மோதிய பினு
ஆள்கடத்தல், கொலை, போதைக் கடத்தல் என குற்றச் செயல்களின் மூலம் நல்ல வருமானம் பார்த்து வந்த பினுவும் ராதாவும் ஒருகட்டத்தில் மோதிக் கொள்ளத் தொடங்கினார்கள். மாமூல் பிரிப்பில் ஏற்பட்ட சிறு தகராறு, பெரும் மோதலாக உருவெடுத்தது. வழக்கமாகப் புழங்கி வரும் எல்லைகளை விஸ்தரிப்பதில் பினுவுக்கு ஏக இடைஞ்சலாக இருந்தார் ராதாகிருஷ்ணன். ராதாவின் எதிரியான மணியோடு கூட்டு சேர்ந்து கொண்டால், தன்னுடைய பலம் அதிகமாகிவிடும் எனக் கணக்கு போட்டார் பினு. இந்தக் கூட்டல் கழித்தலைப் புரிந்து கொண்ட ராதாவின் மாஸ்டர் மைண்ட், மலையம்பாக்கம் சம்பவத்தை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டது. இப்போது களத்தில் ராதாகிருஷ்ணன் மட்டுமே இருப்பது, பினு தரப்புக்குக் கூடுதல் ஆத்திரத்தை வரவழைத்துள்ளது.
போதைப் பொருட்கள், செம்மரம் கடத்தலில் பினு
சூளைமேடு, விருகம்பாக்கம், பூந்தமல்லி, வடபழனி காவல்நிலையங்களில் உள்ள குற்றப் பதிவேடுகளைப் பார்த்தால், பினுவின் சரித்திரம் புரியும். ஆள்கடத்தல், கொலை, கொலை முயற்சி என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன. தன்னிடம் கொட்டிக் கிடக்கும் பணத்தின் பலத்தால் சில வழக்குகளில் இருந்து விடுதலையானவர், பிற வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். போதைக் கடத்தல் தொழிலும் அவ்வப்போது சிக்கல்களை எதிர்கொள்ள, செம்மரக்கடத்தல் பணியை திறம்படச் செய்து வந்தார். மலையம்பாக்கத்தில் நடந்த ரெய்டிலும் 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
அரசியல் வாரிசுவின் மாமனாரும் பினுவும்
அரசியல் குடும்பத்து வாரிசுவின் மாமனார் மரத் தொழில் செய்து வருகிறார். அண்ணா நகரில் பிரமாண்டமாக நடந்து வருகிறது அவருடைய பர்னிச்சர் தொழில். மத்திய வருவாய் புலனாய்வுத்துறையின் தேடுதல் பட்டியிலில் அந்த நபர் இருந்தார். அவர் பெயரோடு ' கட்ட' என்ற அடைமொழியும் சேர்ந்து கொண்டது. பினுவுக்கு இந்தத் தொழிலை அடையாளப்படுத்தியதே அந்த நபர்தான் என்கிறார்கள். தினகரனோடு நெருக்கமாக இருந்த காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டதற்கும், பினு சரண்டர் ஆவதற்குள் உள்ள பின்னணியை முடிச்சுப் போட்டுப் பார்க்கிறது அந்தக் குடும்பம். அதிகாரத்தில் உள்ளவர்கள் 'களையெடுப்பைத்' தொடங்கிவிட்டதாகக் கருதுகிறது அந்தக் குடும்பம்.
பின்மண்டை சில்லுகளை சிதறவிடும் பினு
"எதிரி என ஒருவனைத் தீர்மானித்துவிட்டால், நேரடியாகக் களமிறங்கி ஆயுதத்தைத் தூக்குவது பினுவின் ஸ்டைல். எதிராளி ஒன்று மரணமடைய வேண்டும் அல்லது மனநோயாளியாகத் திரிய வேண்டும் என்பதுதான் அவரது ஒரே அஜெண்டா. பின்மண்டையின் சில்லுகளைச் சிதறவிடுவதுதான் இவர்களின் ஸ்டைல். இதன் விளைவாக மரணத்தைத் தழுவியவர்களும் மனநோயாளி ஆனவர்களின் எண்ணிக்கையும் கணக்கில் அடங்காதது" என்கின்றனர் வடசென்னையின் தொழில்முறை கொலையாளிகள்.