பங்க் குமார் முதல் பர்த் டே பினு வரை! தினகரன் ஆதரவு 'காக்கா தோப்பு' பாலாஜி கத்தி எடுத்த கதை- பகுதி 3
Recommended Video
- மெட்ராஸ்காரன்
தலைநகரில் எத்தனைத் தலைகளை உருளவிட்டாலும் அதிகபட்சமாக ஓராண்டு உள்ளே இருக்கும் குண்டாஸ் சட்டத்தை மட்டுமே காவல்துறை அதிகாரிகளால் ஏவ முடியும். இதனையும் முறையீட்டு தீர்ப்பாயத்தின் மூலம் நிவாரணம் தேடிக் கொள்கிறார்கள் ரவுடிகள். இந்த வழக்கின் விசாரணையின்போது சாட்சி சொல்வதற்கு யாரும் நேரில் வருவதில்லை. சாட்சிகளை சரிக்கட்டும் வேலைகளை வெளியில் இருக்கும் ரவுடிகள் பார்த்துக் கொள்கிறார்கள்.
வழக்கின் தண்டனை கிடைக்க எவ்வளவு பாடுபட்டாலும் போதிய சாட்சிகளை நிறுத்த முடியாமல், அவப் பெயருக்கு ஆளாவது காவல்துறை அதிகாரிகள்தான். நீதிமன்றத்தின் எதிர்பார்ப்புகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடிவதில்லை. தொழில்ரீதியான கொலையாளிகளிடம் போலீஸாரின் ஆதிக்கம் எடுபடுவதில்லை. கொலை நடந்த இடத்தில் கைப்பற்றப்படும் ஆயுதம், கைரேகை போன்றவற்றை மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஓரளவு தண்டனை வாங்கித் தர முடிகிறது.
இந்தத் தடயங்களையும் நன்கு பயிற்சி பெற்ற கொலையாளிகள் விட்டுச் செல்வதில்லை. கொலையைப் பார்த்த சாட்சிகளும் நீதிமன்றத்தின் படிகளை ஏறப் போவதில்லை. இந்தத் தைரியம்தான் அடுத்தடுத்த கொலைகளுக்குக் கால்கோள் போடுகிறது" - காவல்துறை அதிகாரி ஒருவரின் ஆதங்கம் இது.
புறா வளர்த்த பாலாஜி
இந்த வரிகளுக்கு முற்றிலும் பொருத்தமானவர்தான் ' காக்கா தோப்பு' பாலாஜி. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள ஏழு கிணறுதான் இவருடைய முக்கிய ஸ்பாட். அந்தப் பகுதியில் உள்ள காக்கா தோப்பு சேரிப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். தொடக்ககாலத்தில் புறா வளர்த்து காசு பார்ப்பதுதான் இவரது பிரதான தொழிலாக இருந்தது. ஏரியாவில் சிறு சிறு அடிதடி வழக்குகளில் சிக்கி கைதானார். ஒருகட்டத்தில், போலீஸாரின் தொடர்ச்சியான கவனிப்புகளுக்கும் பழகிவிட்டார். அதேநேரம், ' பாலாஜி, அந்த ஏரியாவுல ஒருத்தன் ரொம்ப ஆட்டம் காட்டிட்டு இருக்கான். கொஞ்சம் கவனி' என போலீஸாரே, சிபாரிசுக்கு வரும் அளவுக்கு மாறிப் போனார். இதன்பின்னர், வியாசர்பாடி நாகேந்திரனின் தொடர்பால் பெரிய அசைண்மென்டுகளைச் செய்து வந்தார்.
சிக்க வைத்த ஆர்.கே.நகர் தேர்தல்
எதிரிகளை நேரடிப் பார்வையால் நடுங்க வைப்பதில் பாலாஜிக்கு இணையாக யாரும் இல்லை என்கிறார்கள் ஏரியாவில். எதிராளியை நேரில் சந்தித்து எதிர்பாராத நேரத்தில் சாய்ப்பதில் இவர் கில்லாடி என்கிறார்கள். வடசென்னையைக் கோலோச்சி வந்த ரவுடிகளுக்கு மத்தியில் தன்னுடைய ஏரியாவில் எவரும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு டெரர் இமேஜுடன் வலம் வந்த பாலாஜி, தினகரனுக்கு வாக்கு சேகரிக்கப் போய் வசமாகச் சிக்கிக் கொண்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப் பதிவு நாளன்று, ஆளும்கட்சியை சமாளிக்க ஏராளமான ரவுடிகளைக் களமிறக்கியிருந்தார் பாலாஜி. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை டி.சி ஜெயகுமாரிடம் புகார் அளித்தனர் சில வேட்பாளர்கள். இதற்காகத் தனிப்படையே அமைக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பாலாஜியை துப்பாக்கி முனையில் கைது செய்தது போலீஸ்.
பள்ளு மதன்
வடசென்னையை மையமாக வைத்து இயங்கி வரும் பல ரவுடிகள், தினகரன் ஆதரவாளர்களின் நட்பு வளையத்தில் உள்ளனர். இவர்களை எல்லாம் ஒடுக்க வேண்டும் என்ற அசைண்மென்ட் மேலிடத்தில் இருந்து வந்துள்ளது. இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய கூட்டத்தை போலீஸாரால் பிடித்திருக்க முடியாது. பள்ளு மதன் என்பவர் சோதனைச் சாவடியில் சிக்கப் போய்த்தான் விஷயம் வெளியானது. சிக்கியவர்களில் பலரும் தினகரன் ஆதரவாளர்களுக்கு நெருங்கியவர்கள்' என்ற தகவலையும் சொல்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.
அடேங்கப்பா அட்டகாசம்
இதுவரையில், ஏழு கொலைகள், ஆள்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, நிலத் தகராறு, அடிதடி என பாலாஜி மீதுள்ள வழக்குகளின் எண்ணிக்கை மட்டுமே அறுபதைத் தாண்டும். வடசென்னையின் முகங்களாக விளங்கிய பிரபல ரவுடிகள் யாரிடமும் பயற்சி பெறாமல் தன்னிச்சையாகவே வளர்ந்தவர் பாலாஜி. வியாசர்பாடி அன்னை இந்திரா நகரில் வசித்து வந்த பிரபாகரன் என்ற ரவுடி, கடந்த 2013 மார்ச் மாதம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொக்கை ரவி உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தது காவல்துறை. இந்த வழக்கில் பாலாஜியின் தொடர்புகள் குறித்து அப்போதே தகவல் வெளியானது. இவையெல்லாம் வெளியில் தெரிந்த வழக்குகள். தடயமே இல்லாமல் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
சொத்து சேர்க்கவில்லை
சி.டி.மணி, சிவக்குமார் போல பெரியளவில் பாலாஜி சொத்துக்களை சேர்க்கவில்லை. அதற்கு இணையாக ஏராளமான எதிரிகளை சம்பாதித்துவிட்டார் என விவரித்த அவரது எதிரிகள், அதற்குக் காரணமாக ஒரு சம்பவத்தையும் சொன்னார்கள். சென்னை அடையாறு வண்ணாந்துரையைச் சேர்ந்த வழக்கறிஞர் காமேஷ், கடந்த 2015ம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு நெருக்கமான ரவுடி ஈஸ்வரன்தான் இந்தக் கொலையைச் செய்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ' எங்களுக்கு முக்கியமான எதிரி காக்கா தோப்பு பாலாஜிதான். அவரை எப்படியாவது போட்டுத் தள்ள வேண்டும் என்ற வெறியோடு சுற்றிக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த தொழிலதிபர் ஒருவருக்கு பாலாஜி ரொம்பவே தொல்லை கொடுத்து வந்தார். பாலாஜியைக் கொன்றுவிட்டால், எங்களுக்கு எதிரிகள் என்று சொல்லிக் கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள்' என்றார்.
பாலாஜிக்கு எதிராக ஸ்கெட்ச்
'கத்தி எடுத்துவனுக்குக் கத்தியால்தான் சாவு' என்பார்கள். சிறைக்குள் அமர்ந்தபடியே வெளியில் நடப்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் காக்கா தோப்பு பாலாஜி. அவருக்கு ஸ்கெட்ச் போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.