சென்னை அண்ணா சாலையில் ஆள் விழுங்கும் பள்ளம்... அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
சென்னை: மழை வெள்ளத்தால் குண்டும் குழியுமாக மாறி சென்னை சாலைகளில் வாகனம் ஓட்டுவதே சாகச பயணமாக மாறி வரும் நிலையில் ஆங்காங்கே ஆள் விழுங்கும் பள்ளங்கள் உருவாகி அதிர்ச்சியளித்து வருகின்றன. அண்ணா சாலையில் அறிவாலயம் அருகே இன்று காலை ஏற்பட்ட திடீர் பள்ளம் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையின் இதயபகுதியாக திகழ்கிறது தேனாம்பேட்டை அண்ணாசாலை. அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சென்னைக்குள் வர அண்ணா சாலை முக்கிய சந்திப்பாக இருக்கிறது.
மெட்ரோ ரயில் சுரங்கப்பணிகள் நடைபெற்று வருவதால் சென்னைக்குள் வரும் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லமுடியாமல் கடந்த சில மாதங்களாக திணறிவருகின்றன.
இந்நிலையில் அண்ணாசாலையில் திமுக தலைமை அலுவலகத்திற்கு எதிரே உள்ள பகுதியில், விஜயராகவா சாலை சந்திப்பில் இன்று காலை 9 மணிக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. சுமார் 7 அடி ஆழத்திற்கு திடீரென உருவான இந்த பள்ளம், காலையில் அந்த வழியே தங்கள் அலுவலகங்களுக்கு சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு மெட்ரோ ரயில் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் உடனடியாக இதை காவல்துறையினருக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் அந்த வழியே வந்த வாகனங்களை விஜயராகவா சாலையின் வழியே திருப்பிவிட்டதோடு பொதுப்பணித்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பொதுப்பணித்துறையினர் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு, உடனடியாக மெட்ரோ ரயில் பணிக்காக கொட்டப்பட்டிருந்த மணலை அள்ளி பள்ளத்தை நிரப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தபணியால் அந்த வழியே சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தேனாம்பேட்டை சிக்னல் அருகிலேயே போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்தி இடதுபுறம் மாற்றிவிட்டனர்.
சென்னையில் பெய்த கனமழையாலும் மெட்ரோ ரயில் பணியின்போது கன இயந்திரங்களை பயன்படுத்தியதுமே இந்த திடீர் பள்ளத்திற்கு காரணம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். பள்ளத்தை மணல் கொண்டு நிரப்பி போக்குவரத்தை சீராக்கும் முயற்சியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல சென்னையில் பல பகுதிகளில் முக்கிய சாலைகளில் ஆள் விழுங்கும் பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. மழைக்கு முன்பாகவே பத்துக்கும் மேற்பட்ட சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்ட நிலையில் குடியிருப்புகள் அதிகம் நிறைந்த மயிலாப்பூர் நாட்டு சுப்புராயன் சாலையில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு பயமுறுத்தி வருகிறது. இதனால் அந்த சாலையில் போக்கு வரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.